பிளேடு வச்சிருக்கோம்.. தொட்டீங்க தற்கொலை செய்வோம்.. போலீசை எச்சரித்த ஸ்டாலின், துரைமுருகன்
"எங்களிடம் பிளேடு உள்ளது. நீங்கள் தொட்டால், வெட்டிக்கொள்வோம்" என்று துரைமுருகன் எச்சரித்தும் அதை காதில் போட்டுக்கொள்ளாத காவலர்கள் குண்டுக் கட்டாக தூக்கி சட்டசபைக்கு வெளியே போட்டுள்ளனர்.
சென்னை: எங்களை வெளியேற்ற முயன்றால் தற்கொலை செய்துகொள்வோம் என்று ஸ்டாலின், துரைமுருகன் ஆகிய திமுக சீனியர்கள் மிரட்டல்விடுத்தும் போலீசார் வலுக்கட்டாயமாக அவர்களை வெளியேற்றியுள்ளனர்.
நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற்ற நேற்று திமுகவினர் அமளியில் ஈடுபட்டதால், சட்டசபை நேற்று மதியம் 1 மணி முதல் 3 மணிவரை ஒத்தி வைக்கப்பட்டது. அப்போது ஸ்டாலின் உள்ளிட்ட திமுகவினரை அவைக் காவலர்கள் வலுக்கட்டாயமாக வெளியேற்ற முற்பட்டனர்.
இதற்கு திமுகவினர் எதிர்ப்பு தெரிவித்தனர். அப்போது தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
எச்சரிக்கை
அவை காவலர்கள் எப்படியும் வெளியேற்றிவிடுவார்கள் என்ற சூழ்நிலை வந்தபோது, "எங்களை வெளியேற்றினால் தற்கொலை செய்துவிடுவோம்" என்று மிரட்டல் விடுத்துள்ளார். துரைமுருகனோ, "எங்களிடம் பிளேடு உள்ளது. நீங்கள் தொட்டால், வெட்டிக்கொள்வோம்" என்று எச்சரித்துள்ளார்.
வெளியே போட்டுவிட்டனர்
ஆனால் இதை காதில் போட்டுக்கொள்ளவில்லை காவலர்கள். குண்டுக் கட்டாக தூக்கி சட்டசபைக்கு வெளியே போட்டுவிட்டனர். இந்த களேபரத்தில் ஸ்டாலின் சட்டை பை கிழிந்தது. அவர் கிழிந்த சட்டையோடு நிருபர்களுக்கு நடந்த சம்பவங்களை விவரித்தார்.
சும்மா விளையாட்டுக்கு
இதுகுறித்து திமுக தரப்பில் கேட்டபோது, "சட்டசபைக்குள் பிளேடு உள்ளிட்ட ஆபத்தை விளைவிக்கும் சிறு கருவிகளை கூட எடுத்துச் செல்ல முடியாது. மெட்டல் டிடெக்டர் சோதனைகளின்போது காட்டி கொடுத்துவிடும். துரைமுருகன், போலீசாரை ஏமாற்றிவிட்டு போராட்டத்தை தொடருவதற்காக இவ்வாறு கூறினார். ஆனால் அதை போலீசார் கண்டுபிடித்ததால்தான் அதை கண்டுகொள்ளவில்லை என்றனர்"
வேடிக்கை துரைமுருகன்
துரைமுருகன் இவ்வாறு வேடிக்கையாக கவனத்தை திசைதிருப்புவதில் கை தேர்ந்தவர். நேற்று சட்டசபையை விட்டு வெளியேற்றப்பட்டதும், ஆளுநர் மாளிகை சென்ற ஸ்டாலின் பிறகு மெரினா கடற்கரையிலுள்ள காந்தி சிலை கீழே போராட்டம் நடத்தினார். அப்போது நிருபர்களில் ஒருவர் ஏன் காந்தி சிலைக்கு கீழே போராட்டம் நடத்துகிறீர்கள் என கேள்வி எழுப்பியபோது, சும்மா உட்கார்ந்துவிட்டு போகலாம் என வந்தோம், என்று கிண்டல் செய்தார் துரைமுருகன்.