விஜயகாந்த்தை முதல்வர் வேட்பாளராக்கியதில் மதிமுகவினருக்கு பெரிய வருத்தமே.... வைகோ ஒப்புதல்
சென்னை: தேமுதிக தலைவர் விஜயகாந்த்தை கூட்டணியின் முதல்வர் வேட்பாளராக்கியதில் மதிமுகவினருக்கு பெரிய அளவில் வருத்தம் ஏற்பட்டிருக்கிறது; ஆனால் தலைவர் சரியான முடிவை எடுத்திருக்கிறார் என்பது அவர்களுக்கு புரியும் என அக்கட்சியின் பொதுச்செயலர் வைகோ தெரிவித்துள்ளார்.
திமுக, அதிமுகவுடன் மாறி மாறி கூட்டணி வைத்த மதிமுக, இந்த தேர்தலில் மக்கள் நலக் கூட்டணி என்ற மாற்று அரசியல் அணியை முன்னெடுத்தது. இது அக்கட்சியினருக்கு பெரும் உற்சாகத்தை கொடுத்தது.
தேமுதிகவையும் இந்த கூட்டணியில் சேர்த்துவிட பெரும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால் தமது தலைமையில்தான் கூட்டணி; தாமே முதல்வர் வேட்பாளர் என்பதில் விஜயகாந்த் உறுதியாக இருந்தார்.
இதனால் வேறுவழியின்று தேமுதிக+ மக்கள் நலக் கூட்டணி இணைந்து "கேப்டன் விஜயகாந்த் அணி" உதயமானது. ஆனால் இந்த அணியின் புதிய பெயருக்கு இடதுசாரித் தலைவர்கள் வெளிப்படையாகவே உடன்பாடில்லை எனத் தெரிவித்துவிட்டனர்.
இந்த நிலையில் மதிமுகவினரும் விஜயகாந்த்தை முதல்வர் வேட்பாளராக அறிவித்ததில் மிகப் பெரிய அளவில் வருத்தமடைந்துள்ளதாக அந்த கட்சியின் பொதுச்செயலரான வைகோவே வெளிப்படையாக ஒப்புக் கொண்டுள்ளார்.
இது தொடர்பாக நாளேடு ஒன்றுக்கு வைகோ அளித்துள்ள விளக்கம்:
பாஜக ஆட்சிக் காலத்தில் என்னை மத்திய அமைச்சராக்க வாஜ்பாய் வற்புறுத்தினார். ஆனால் அதனை மறுத்தேன். பொடா சட்டத்தில் 19 மாதங்கள் சிறையில் இருந்துவிட்டு வெளியே வந்ததும் நடந்த லோக்சபா தேர்தலில் போட்டியிடாமல் இருந்ததை இப்போது பெரிய தவறாக நினைக்கிறேன். அந்தத் தேர்தலில் நான் போட்டியிட்டிருக்க வேண்டும்.
இப்போது சட்டசபை தேர்தலில் என்னை முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்திக் கொள்ளாமல் இருப்பது மிகச் சரியான முடிவே ஆகும். அதே நேரத்தில் முதல்வர் பதவி வேண்டாம் என்று சொல்ல நான் ஒன்றும் பெரிய துறவி கிடையாது.
இந்தத் தேர்தல் என்பது மிகப்பெரிய யுத்த களமாகும். இதில் ஒருபுறம் திமுகவும் இன்னொருபுறம் அதிமுகவும் பெரும் பண பலத்துடன் நிற்கின்றன. இந்த யுத்த களத்தில் ஒரு கூட்டணியை முன்னின்று இயக்குகிற சேனாதிபதியாக நான் சில முடிவுகளை எடுத்தே தீர வேண்டும்.
திமுகவும், பாஜகவும் விஜயகாந்தை கூட்டணிக்கு கொண்டுவர எவ்வளவோ முயற்சித்தன. அதற்காக எதை செய்யவும் தயாராக இருந்தன. ஆனால், அவற்றை எல்லாம் உதறிவிட்டு மக்கள் நலக் கூட்டணியுடன் விஜயகாந்த் கைகோர்த்துள்ளார். ஊழல் ஒழிப்பு என்பதுதான் எங்களது எண்ணம். எனவே, விஜயகாந்தை முதல்வர் வேட்பாளராக அறிவித்தோம்.
இதுதான் இப்போதைக்கு சரியான முடிவாகும். இந்த முடிவால் எனது கட்சிக் காரர்களுக்கும், தொண்டர்களுக்கும் பெரிய அளவில் மனவருத்தம் இருக்கலாம். ஆனால், தலைவர் சரியானதொரு முடிவைத்தான் எடுத்திருக்கிறார் என்பது அவர்களுக்கு நன்றாக புரியும்.
இவ்வாறு வைகோ கூறியுள்ளார்.