19 எம்எல்ஏக்களும் எங்கள் பக்கம் வருவார்கள் - அமைச்சர் காமராஜ்
19 எம்எல்ஏக்களும் விரைவில் எங்கள் பக்கம் வருவார்கள் என்று அமைச்சர் காமராஜ் கூறியுள்ளார்.
மன்னார்குடி: எம்எல்ஏக்களுக்கு ஆசை வார்த்தை கூறி தினகரன் அழைத்து சென்றுள்ளதாகவும்,19 எம்எல்ஏக்களும் விரைவில் எங்கள் பக்கம் வருவார்கள் என்று அமைச்சர் காமராஜ் கூறியுள்ளார்.
ஓபிஎஸ் உடன் எடப்பாடி பழனிச்சாமி அணி இணைந்ததற்கு டிடிவி தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அரசு மீது நம்பிக்கையில்லை என்று ஆளுநருக்கு கடிதம் கொடுத்துள்ளனர்.
எம்எல்ஏக்கள் 19 பேரும் புதுச்சேரியில் உள்ள ஒரு ரிசார்ட்டில் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர். டிடிவி தினகரன் கட்சியில் இருந்து மாவட்ட செயலாளர்களை நீக்கி வருகிறார்.
ஜெயலலிதா நியமித்த நிர்வாகிகளை நீக்கிவிட்டு தனது ஆதரவாளர்களை மாவட்ட செயலாளர்களாக டிடிவி தினகரன் நியமித்துள்ளதற்கு எதிர்ப்பு வலுத்து வருகிறது. மாநிலம் முழுவதும் உருவபொம்மையை எரித்து போராடி வருகின்றனர்.
திருவாரூர் மாவட்ட செயலாளர் பதவியில் இருந்து அமைச்சர் காமராஜ் நீக்கப்பட்டு புதிய செயலாளராக எஸ். காமராஜ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள அமைச்சர் காமராஜ் ஆதரவாளர்கள், டிடிவி தினகரனின் உருவபொம்மையை எரித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில் மன்னார்குடியில் உள்ள அமைச்சர் காமராஜ் வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இரவு முழுவதும் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட உள்ளதாக எஸ்.பி. மயில்வாகனம் தெரிவித்தார்.
செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் காமராஜ், 19 எம்எல்ஏக்களும் தங்கள் பக்கம் வருவார்கள் என்று கூறினார். டிடிவி தினகரன், அவர்களுக்கு ஆசை வார்த்தை கூறி அழைத்து சென்றதாக கூறிய காமராஜ், கட்சியில் இருந்து தன்னை நீக்க எந்த தகுதியும் தினகரனுக்கு கிடையாது என்று கூறியுள்ளார்.