மாண்புமிகு புரட்சித்தலைவி இதயதெய்வம் அம்மா அவர்களின் ஆணைக்கிணங்க… ஸ் அப்பா மூச்சு வாங்குதே
சென்னை: தமிழகத்தில் கொட்டித்தீர்த்த கனமழையால் தாழ்வான பகுதிகள் தண்ணீரில் மிதக்க மக்களோ கண்ணீரில் தத்தளிக்க நிவாரணம் அளிக்க வரும் அமைச்சர்களும், அதிகாரிகளும் பேசும் பேச்சுக்களை கேட்டால் காதில் ரத்தம் வராத குறைதான்.
வெள்ளம் வடிந்துவிட்டாதா? இயல்பு நிலை திரும்புகிறதா? என்று கேட்டாலே அமைச்சரோ அதிகாரியோ யாராக இருந்தாலும் மாண்புமிகு புரட்சித்தலைவி இதயதெய்வம் அம்மா அவர்களின் ஆணைக்கிணங்க இயல்பு நிலை திரும்புவதாகவும், அதே நேரத்தில் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் எடுத்த போர்கால நடவடிக்கையால் மக்கள் மகிழ்ச்சியாக உள்ளனர் என்று கூறுகின்றனர்.
ஏற்கனவே சேலம் மாவட்ட ஆட்சியர் ஒருவர் அம்மா அவர்களின் ஆணைக்கிணங்க நல்ல மழை பெய்துள்ளது என்று கூறி வாங்கிக் கட்டிக்கொண்டார். அதேபோல அமைச்சர்களும் வெள்ள நிவாரணப் பணியில் அம்மா புராணம் பாடிவருகின்றனர்.
போர்கால நடவடிக்கை
சென்னையில் வில்லிவாக்கம் சிட்கோ நகரில் வெள்ளம் வடிந்தபாடில்லை. பள்ளிக்கரணை,கோவிலம்பாக்கம், தாம்பரம், முடிச்சூர் எல்லாம் இன்னமும் தத்தளித்துக்கொண்டுதான் இருக்கின்றன. ஆனால் தமிழக அரசின் போர்க்கால நடவடிக்கையால் வெள்ளம் பாதித்த பகுதிகளில் இயல்பு நிலை திரும்புவதாக உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார்.
அமைச்சரின் நிவாரண பணி
சென்னை சைதாப்பேட்டையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அதில், அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, வளர்மதி, கோகுல இந்திரா, மாநகராட்சி ஆணையர் விக்ரம் கபூர் உள்ளிட்டோர் கலந்து கொண்டு நிவாரண உதவிகள் வழங்கினர்.
கோல்டு மிக்ஸ் சீரமைப்பு
தமிழகம் முழுவதும் மழையால் பழுதடைந்த சாலைகளை, கோல்டுமிக்ஸ் எனப்படும் புதிய வகை தொழில்நுட்பத்தை கொண்டு சீரமைக்கும் பணிகள் நடைபெற்று வருவதாக அமைச்சர் வேலுமணி தெரிவித்துள்ளார்.
தமிழகம் முழுவதும்
இதேபோல கடலூர், தூத்துக்குடி என வெள்ளத்தால் அதிகம் பாதிக்கப்பட்ட மாவட்டங்களிலும் வெள்ளம் பாதித்த பகுதிகளில் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வெள்ள நிவாரணம் வழங்கப்படுவதாகவும், வெள்ளநீர் வெளியேற்றப்பட்டு மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பி வருவதாகவும் அமைச்சர்களும், அதிகாரிகளும் கூறி வருகின்றனர். இதைக்கேட்கும் செய்திவாசிப்பாளர்களுக்கே சிரிப்பு வருகிறது ஆனால் மக்களின் கண்களிலோ ரத்தக்கண்ணீர்தான் வருகிறது.