மதுவை ஒழிக்க போராடும் வைகோ திமுக உடன் சேர்வதா?: கேட்கிறார் சீமான்
திருச்சி: மதுவை ஒழிக்க வேண்டும் என்று நாங்கள் போராடுகிறோம். ஆனால் வைகோ மது விற்பனையை தொடங்கிய தி.மு.க.விடம் தற்போது கூட்டணி சேரும் நிலை உள்ளது. வைகோவிற்கு எங்களுக்கும் கொள்கை முரண்பாடு உள்ளதால் வரும் சட்ட மன்ற தேர்தலை தனியாக சந்திப்போம் என்று சீமான் கூறியுள்ளார்.
திருச்சியில் கடந்த மாதம் 24ந்தேதி நாம் தமிழர் கட்சியின் மாநில மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் கலந்து கொண்டு பேசிய கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்பட 40 பேர் மீது இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசியது உள்பட 4 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கில் ஜாமீன் கேட்டு உயர்நீதிமன்ற மதுரைகிளையில் சீமான் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. மனுவை விசாரித்த நீதிபதி திருச்சி நீதிமன்றத்தில் ஆஜராகி பின்னர் எடமலைப்பட்டி புதூர் போலீஸ் நிலையத்தில் கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனையுடன் முன் ஜாமீன் வழங்கினார்.
இதை தொடர்ந்து நேற்று சீமான் தரப்பினர் நீதிமன்றத்தில் ஆஜராகினர். இதை தொடர்ந்து இன்று சீமான் மற்றும் திருச்சி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பிரபு உள்பட 36 பேர் இன்று திருச்சி எடமலைப்பட்டி புதூர் போலீஸ் நிலையத்தில் ஆஜராகி கையெழுத்திட்டனர்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய சீமான், இலங்கையில் இறுதி கட்ட போரின் போது வெள்ளை கொடியுடன் சென்று சரணடைந்த 320 பேரை சுட்டு கொன்றதற்கு மத்திய அரசு கண்டனம் கூட தெரிவிக்கவில்லை என்றார்.
மதுவை ஒழிக்க வேண்டும் என்று நாங்கள் போராடுகிறோம். ஆனால் வைகோ மது விற்பனையை தொடங்கிய தி.மு.க.விடம் தற்போது கூட்டணி சேரும் நிலை உள்ளது. அவருக்கும் எங்களுக்கும் கொள்கை முரண்பாடு உள்ளதால் அவருடன் கூட்டு சேர வாய்ப்பு இல்லை. அதனால் வரும் சட்ட மன்ற தேர்தலை தனியாக சந்திப்போம் என்றும் சீமான் தெரிவித்துள்ளார்.