ஆர்.கே. நகர் தொகுதியில் வாக்காளர்களை மிரட்டினால் கடும் நடவடிக்கை.. துணை தேர்தல் ஆணையர் வார்னிங்
ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் வாக்காளர்களை மிரட்டி காரியம் சாதிக்க நினைத்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று துணை தேர்தல் ஆணையர் உமேஷ் சின்ஹா எச்சரிக்கை விடுத்துள்ளார்.
சென்னை: ஆர்.கே. நகர் தொகுதி இடைத்தேர்தலில் வாக்காளர்களை மிரட்டுவோர் கடுமையாக தண்டிக்கப்படுவார்கள் என்று உமேஷ் சின்ஹா அறிவித்துள்ளார்.
சென்னை ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் வாக்களிக்க உள்ள வாக்காளர்களுக்கான அடையாள ஆவணங்கள் குறித்த தகவல்களை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தல் தொடர்பாக துணை தேர்தல் ஆணையர் உமேஷ் சின்ஹா செய்தியாளர்களை இன்று சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
என்னென்ன ஆவணங்கள்?
இடைத்தேர்தலில் வாக்களிக்க வாக்காளர் அடையாள அட்டையை பயன்படுத்தலாம். வாக்காளர் அடையாள அட்டை தர இயலாதவர்கள் ஓட்டுநர் உரிமம், புகைப்படத்துடன் கூடிய வங்கி மற்றும் அஞ்சலக கணக்கு புத்தகங்கள், பான் கார்டு, ஆதார் அட்டை, ஊரக வேலை உறுதிதிட்ட பணி அட்டை உள்ளிட்டவற்றை பயன்படுத்தலாம்.
பணப்பட்டுவாடா
தேர்தலில் முறைகேடுகள் நடைபெறாமல் தடுக்க தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்து வருகிறது. வாக்காளர்களை கவர்வதற்காக பணம் தரப்படுவதாக பல கட்சிகள் புகார் அளித்துள்ளன.
விழிப்புணர்வு
வேட்பாளர்கள் தரும் பரிசு பொருட்களை வாக்காளர்கள் வாங்க கூடாது. வாக்குகளை யாரும் விலைக்கு விற்க வேண்டாம். இதனை வலியுறுத்தும் வகையில் விழிப்புணர்வு பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன.
தீவிர கண்காணிப்பு
மூத்த ஐஏஎஸ் அதிகாரிகள் இரவு நேரங்களிலும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். முறைகேடுகள் குறித்து தேர்தல் அதிகாரியிடம் வாக்காளர்கள் புகார் அளிக்கலாம். தேர்தல் அமைதியாக நடைபெறுவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகின்றன.
வெப் கேமரா
வெளிப்படையான வாக்குப்பதிவை உறுதி செய்ய வெப் கேமரா மூலம் வாக்குசாவடிகள் கண்காணிக்கப்படும். அனைத்து வாக்குசாவடிகளிலும் மத்திய பாதுகாப்பு படை நிறுத்தப்படும்.
எச்சரிக்கை
வாக்காளர்களை தேர்தலில் போட்டியிடும் கட்சிகள் மிரட்டினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். தேர்தல் நேர்மையாக நடைபெற அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என்றும் உமேஷ் சின்ஹா கூறினார்.