மோடி துரோகம் செய்யலையாம்.. கர்நாடக காங்.தான் துரோகம் செஞ்சதாம்.. சொல்கிறார் தமிழிசை #cauvery
சென்னை: காவிரிப் பிரச்சினையில் தமிழகத்திற்கு துரோகம் செய்தது பிரதமர் மோடி அல்ல. கர்நாடக காங்கிரஸ்தான் துரோகம் செய்தது என்று பாஜக தலைவர் டாக்டர் தமிழிசை செளந்தரராஜன் கூறியுள்ளார்.
இந்த விஷயத்தில் மோடியை யாரும் குறை சொல்லக் கூடாது என்றும் தமிழிசை கூறியுள்ளார். மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியம் தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் அடித்த பல்டியை துரோகச் செயல் இல்லை என்றும் தமிழிசை கூறியுள்ளதுதான் இதில் முக்கியமானது.
அது ஒரு வக்கீல் சொன்ன வாதம்தான் என்றும், சட்ட சிக்கலைத்தான் அவர் சொன்னார் என்றும் தமிழிசை கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது. இதுதொடர்பாக தமிழிசை வெளியிட்டுள்ள அறிக்கை:
உறுதியாக உள்ளது பாஜக
தமிழக பாரதீய ஜனதா கட்சி தமிழகத்திற்கு காவிரி தண்ணீர் கிடைக்க வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளோம். அதேபோல், காவிரி நதிநீர் ஆணையம் அமைக்க வேண்டும் என்பதிலும் பாரதீய ஜனதா கட்சி உறுதியாக உள்ளது.
விற்பன்னர்களைக் கொண்டு கூட்டம் போட்டு
காவிரி பங்கீட்டில் விற்பன்னர்களாக இருக்கும் நிபுணர்களைக் கொண்டு கூட்டம் நடத்தி சட்ட ரீதியாகவும், பங்கீட்டு கொள்கை ரீதியாகவும் எவ்வாறு நம் உரிமையை நிலை நாட்டுவது என்பதையும், எத்தகைய வழிமுறைகளை மேற்கொள்ள வேண்டும் என்பதையும் தீவிரமாக ஆலோசித்து ஓர் அறிக்கை தயார் செய்யப்பட்டிருக்கிறது. இதை எங்கள் மத்திய தலைமைக்கும், சட்ட அமைச்சகத்திற்கும், நீர்வளத்துறை அமைச்சகத்துக்கும், பிரதமர் அலுவலகத்திற்கும் சமர்ப்பிக்க உள்ளோம்.
பிரதமரையும் சந்திக்கப் போகிறோம்
பிரதமரையும், அமைச்சர்களையும் சந்திக்க உள்ளோம். இதற்காக மாநில தலைவராகிய நான் மற்றும் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், முன்னாள் தலைவர்கள் இல.கணேசன், சி.பி.ராதாகிருஷணன், தேசிய செயலாளர் எச்.ராஜா ஆகியோர் கொண்ட குழு அமைக்கப்பட்டிருக்கிறது. இந்த குழு, காவிரி தண்ணீர் தமிழகத்திற்கு வர வேண்டும் என்று மத்திய அரசிடம் வலியுறுத்தி அதனை பெற்றுத்தருவதற்கான முயற்சிகளை மேற்கொள்வோம்.
மோடியா துரோகம் செய்தார்
கர்நாடகாவை ஆள்வது காங்கிரஸ் என்ற வகையிலும், உச்சநீதிமன்ற தீர்ப்பின் படி தமிழகத்திற்கு தண்ணீர் தர மறுத்துக்கொண்டிருப்பது காங்கிரஸ் என்பதை உணர்ந்து அந்த கட்சியும் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். தமிழகத்திற்கு துரோகம் செய்து கொண்டிருப்பது தற்போது கர்நாடக காங்கிரஸ் அரசு தான். இதை உணர்ந்து கொள்ளாமல், தா.பாண்டியன் போன்றவர்கள் மிகத்தவறான பிரசாரத்தை மேற்கொள்கின்றனர்.
மோடியா தடுத்தார்.. !
ஏதோ காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதை பிரதமர் தலையிட்டு தடுத்து விட்டார் என்று எந்த அடிப்படை ஆதாரமும் இல்லாத பொய்யான தகவலை பரப்பிக்கொண்டிருக்கிறார்கள். சட்ட ரீதியான சிக்கலை மத்திய வழக்கறிஞர் சொல்லியிருக்கிறார் என்பதும், இதில் பிரதமருக்கு பங்கில்லை என்பதும் உண்மை.
மத்திய அரசு தமிழகத்தின் பக்கம் உள்ளதாம்!
எங்களைப் பொறுத்தவரை காவிரி பிரச்சினைகளை அரசியல் ஆக்காமல், தண்ணீர் பெற்றுத் தருவதையும், காவிரி நதிநீர் ஆணையம் அமைக்க வேண்டும் என்ற அவசியத்தை உணர்ந்தும் செயலாற்றிக்கொண்டிருக்கிறோம். மத்திய அரசு தமிழகத்தின் பக்கம் இருக்கிறது என்பதை தமிழக மக்களுக்கு பலமுறை நிரூபித்திருக்கிறார்கள்.
பூங்கா கொடுத்தி்ருக்காங்களே!
சமீபத்தில் கூட, தஞ்சை, வேலூர், சேலம் போன்ற நகரங்களை நவீன நகரங்களாக அறிவித்தது மட்டுமல்ல, இன்று 330 ஏக்கரில் மிகப்பெரிய மருத்துவ தொழில்நுட்ப பூங்காக்களை இந்தியாவிலேயே முதல் முறையாக அமைப்பதற்கு செங்கல்பட்டு பகுதியை தேர்ந்தெடுத்திருக்கிறார்கள். அதனால் தமிழகத்தில் பல இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைப்பதோடு, தமிழகத்தின் பொருளாதாரமும் மேம்படும்.
ஆக. அக்கறையோடும், பொறுப்புணர்வோடும்
ஆக, அக்கறையோடும், பொறுப்புணர்வோடும் செயல்படும் மத்திய அரசை அடியோடு கடுமையாக விமர்சிப்பது தவிர்க்கப்பட வேண்டும் எனவும், நிச்சயமாக காவிரி தண்ணீர் பெற்றுத்தருவதில் இதற்கு முந்தைய தி.மு.க பங்கேற்ற காங்கிரஸ் அரசு போல் இல்லாமலும், இப்போது இருக்கும் கர்நாடக காங்கிரஸ் அரசு போல் இல்லாமலும், நியாயமாக தமிழகத்திற்கு கிடைக்க வேண்டியதை கிடைக்க அத்தனை முயற்சிகளும் மேற்கொள்ளப்படும் என்பதை உறுதியாக கூறிக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார் தமிழிசை.