தமிழகத்தில் அரசியல் கலாச்சாரம் கெட்டதற்கு திராவிட இயக்கமே காரணம்! - கி வீரமணி
சென்னை: தமிழகத்தில் அரசியல் நாகரிகம் இல்லாமல் போனதற்கு காரணமே திராவிட இயக்கம்தான் என்ற கசப்பான உண்மையை வேதனையோடு ஒப்புக்கொள்ள வேண்டும் என திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
வட மாநிலங்களில் அரசியல் தலைவர்கள் ஒருவரை ஒருவர் சந்திக்கும்போது அரசியலை மறந்து அன்பு பாராட்டி மகிழும் நாகரிகத்தைப் பார்க்க முடிகிறது. லாலு பிரசாத் யாதவ், முலாயம் சிங் யாதவ் இல்லத் திருமண விழாவில் பங்கேற்ற பிரதமர் நரேந்திர மோடி அவர்களுடன் கூடி மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.
டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலில் எதிர்த்துப் போட்டியிட்டாலும் தேர்தல் முடிந்ததும் பிரதமர் மோடியை ஆம் ஆத்மி கட்சித் தலைவர் அரவிந்த் கேஜரிவால் சந்தித்துப் பேசினார். இருமல், ஆஸ்துமாவில் இருந்து விடுபட கேஜரிவாலுக்கு தான் சிகிச்சை பெற்று வரும் மருத்துவரை மோடி பரிந்துரை செய்து தமது பண்பை வெளிப்படுத்தியுள்ளார்.
ஆனால், தமிழகத்தில் திருமண வீடு, துக்க வீடுகளில் கூட அரசியல் கட்சித் தலைவர்கள் ஒருவரை ஒருவர் சந்திக்கத் தயங்கும், மறுக்கும் சூழ்நிலை உள்ளது. சட்டப்பேரவையில் நேருக்கு நேர் பார்த்து மற்றொரு கட்சியினர் வணக்கம் சொல்வதும், பதிலுக்கு புன்னகையுடன் வணக்கம் சொல்வதும் இன்று அருகிவிட்டது.
விமான, ரயில் பயணங்களின்போது ஒரே பெட்டியில் பயணம் செய்யும்போது ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்து விடக் கூடாது என்பதற்காக ஓடோடிச் சென்று அறைக் கதவைச் சாத்திக் கொள்வது, சந்திப்பைத் தவிர்ப்பதற்காக ரயில் நிற்பதற்கு முன்பே குதித்து ஓடி காரில் ஏறி கதவை அடைத்துக் கொள்வது போன்ற கசப்பான நிகழ்வுகள் நடக்கின்றன.
திராவிட இயக்கத்தின் பிறப்புக்குப் பின்னரே இந்த நிலை என்பது கசப்பான உண்மையாகும். இதை நாம் வெட்கத்தோடும், வேதனையோடும் ஒப்புக்கொண்டே ஆக வேண்டும். இந்த நிலை மாற வேண்டும்," என கி. வீரமணி வேண்டுகோள் விடுத்துள்ளார்.