என் சட்டையை கிழித்தனர்.. திமுகவினரை ஷூ காலால் மிதித்தனர் - ஸ்டாலின் பரபரப்பு
சென்னை: சட்டசபையில் தர்ணாவில் ஈடுபட்ட எதிர்கட்சித்தலைவர் ஸ்டாலினை குண்டுக்கட்டாக தூக்கி வெளியேற்றினர். இதில் அவரது சட்டை கிழிந்து போனது. தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய ஸ்டாலின் பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.
ரகசிய வாக்கெடுப்புக்கு சபாநாயகர் அனுமதிக்கவில்லை. சபையில் நடந்த சம்பவத்திற்கு சபாநாயகரிடம் நான் வருத்தம் தெரிவித்தேன். மறைமுக வாக்கெடுப்பை நடத்துங்கள் என்று கூறினேன். அவர் ரகசிய வாக்கெடுப்பு நடத்த இடம் தரவில்லை.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஜனநாயக முறையில் அறப்போராட்டம் நடத்தினோம். என்னை அடித்து, உதைத்து, சட்டையை கிழித்து வெளியேற்றினார்கள் என்றார். சபாநாயகர் தனது சட்டையை தானாக கிழித்துக்கொண்டு நீலிக்கண்ணீர் வடிக்கிறார் என்றும் ஸ்டாலின் குற்றம் சாட்டினார்.
500க்கும் மேற்பட்ட காவலர்களை அனுப்பி குண்டுக்கட்டாக, தூக்கி அடித்து உதைத்தனர் இதில் என் சட்டை கிழிந்து போனது. இது குறித்து ஆளுநரிடம் நேரில் முறையிடுவோம் என்றார். அதே கிழிந்த சட்டையுடன் ஸ்டாலின் காரில் ஏறி கிளம்பினார்.