நெல்லையில் மழை: நீரில் மூழ்கிய பயிர்கள்: வியாபாரிகள், விவசாயிகள் தவிப்பு
நெல்லை: தீபாவளிப் பண்டிகைக்கு இன்னும் சில தினங்களே உள்ள நிலையில் கனமழை கொட்டிவருவதால் நெல்லையில் வியபாரிகள் தவிப்படைந்துள்ளனர்.
கார் சாகுபடி அறுவடை நடைபெற்று வரும் நிலையில் திருநெல்வேலி மாவட்டத்தில் மழை நீடித்து வருவதால் தாமிரபரணி பாசனத்தில் சுமார் 100 ஏக்கரில் நெற்பயிர்கள் நீரில் மூழ்கி சேதமடைந்துள்ளன இதனால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.
நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் ஜூன் மாதம் தென்கிழக்கு பருவமழையும் அக்டோபர் மாதம் வடகிழக்கு பருவமழையும், பெய்யும். இதன் மூலம் ஜூன் மாதத்தில் கார் பருவ சாகுபடியும், அக்டோபர் மாதத்தில் பிசான பருவ சாகுபடியும் நடக்கும்.
கடந்த ஜூன் மாதம் தென்மேற்கு பருவமழை ஏமாற்றம் அளித்தது. இதனால் பிசான நெல் சாகுபடிக்காக பாபநாசம் அணையில் கடந்த வாரம் தண்ணீர் திறக்கப்பட்டது. இந்த நிலையில் கடந்த 5 நாட்களாக நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது.
நெல்லை மாவட்டத்தில் இரவு விடிய விடிய மழை பெய்தது. இன்று காலை 7 மணி நிலவரப்படி மழை தொடர்கிறது. இதனால் பாளை வஉசி மைதானம், நெல்லை சந்திப்பு ஈரடுக்கு மேம்பாலத்தின் முன்பகுதியில் தண்ணீர் தேங்கியுள்ளது. இந்த வழியாக செல்லும் இருசக்கர வாகனங்கள் தண்ணீரில் மூழ்கியபடியே செல்கின்றன.
கலெக்டர் அலுவலக வாளகத்திலும் தண்ணீர் தேங்கியுள்ளது.
வியாபாரம் பாதிப்பு
தொடர்மழை காரணமாக மழை காரணமாக தீபாவளிக்காக கடைக்கு செல்வோர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக பட்டாசு விற்பனை சுத்தமாக படுத்து விட்டது. இதனால் வியாபாரிகள் கவலையில் உள்ளனர்.
பதிவான மழை அளவு
நெல்லை மாவட்டத்தை பொறுத்தவரை பாபநாசத்தில் 32.4 மிமீ, சேரன்மகாதேவியில் 22.2மிமீ, நாங்குநேரி 15.6 மிமீ, பாளையில் 32.6 மிமீ, ராதாபுரம் 28, சங்கரன்கோவில் 10, செங்கோட்டை 9, சிவகிரி 13.2, தென்காசி 10.8, நெல்லை 16, ஆலங்குளம் 27.2, விகேபுதூரில் 11மிமீ மழை பதிவாகியுள்ளது.
அணை நீர்மட்டம்
பாபநாசம் அணையின் நீர்மட்டம் 63.05 அடியாக உள்ளது. சேர்வலாறு அணையின் நீர்மட்டம் 75.66, மணிமுத்தாறு அணையின் நீர்மட்டம் 54.55, பாபநாசம் அணை பகுதியில் 6, மணிமுத்தாறு அணையில் 15.4, கடனா நதியில் 5, ராமநதியில் 30, கருப்பாநதியில் 8, குண்டாறில் 7 மிமீ மழை பதிவாகியுள்ளது.
நீரில் மூழ்கிய நெற்பயிர்கள்:
தாமிரபரணி பாசனத்தில் அம்பாசமுத்திரம், கடையம், சேரன்மகாதேவி, ஆழ்வார்குறிச்சி, கல்லிடைக்குறிச்சி, வீரவநல்லூர், கீழஆம்பூர், பத்தடை, கோபாலசமுத்திரம், மேலச்செவல் பகுதியில் தற்போது கார் சாகுபடி அறுவடை நடைபெற்று வருகிறது. தொடர்ந்து பெய்து வரும் மழையால் அறுவடை பாதிக்கப்பட்டுள்ளது.
அறுவடை பாதிப்பு
மேலும் அடுத்த சில தினங்களில் அறுவடை செய்யும் பருவத்தில் உள்ள நெற்பயிர்கள் மழைக்கு சாய்ந்து நீரில் மூழ்கி காணப்படுகிறது. வெள்ளிக்கிழமை இம்மாவட்டத்தில் அம்பாசமுத்திரம், கடையம், ஆழ்வார்குறிச்சி, மூக்கூடல், வீரவநல்லூர், கல்லிடைக்குறிச்சி, பத்தமடை பகுதியில் மழை தொடர்ந்து பெய்தது. மழை நீடித்து வருவதால் அறுவடை செய்து நெல்லை கரை சேர்க்க முடியுமா என்ற அச்சத்தில் விவசாயிகள் கவலை தெரிவித்தனர்.
உப்பளத்தொழில் பாதிப்பு
இதனிடையே தூத்துக்குடி மாவட்டத்தில் பெய்துவரும் கனமழையால் உப்பளத்தொழில் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் உப்பு உற்பத்தியாளர்கள் கவலையடைந்துள்ளனர்.