ஆயிரக்கணக்கானோரின் அஞ்சலியுடன் காந்தியவாதி சசி பெருமாள் உடல் நல்லடக்கம்
சேலம்: டாஸ்மாக் கடையை மூடக்கோரி நடைபெற்ற போராட்டத்தில் உயிரிழந்த காந்தியவாதி சசிபெருமாளின் உடல் இன்று அரசியல் தலைவர்கள் மற்றும் பொதுமக்களின் அஞ்சலிக்கு பின்னர் நல்லடக்கம் செய்யப்பட்டது.
உண்ணாமலைப்பகுதியில் உள்ள மதுக்கடையை அகற்றக்கோரி, கடந்த 31ம் தேதி காந்தியவாதி சசிபெருமாள் செல்போன் டவர் மீது ஏறி போராட்டம் நடத்திக் கொண்டிருந்தபோது திடீரென மரணம் அடைந்தார்.

அவரது உடல் பிரேத பரிசோதனைக்குப் பின்னர் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனையில் அவரது உடல் வைக்கப்பட்டிருந்தது. தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்தும் வரை வாங்கப்போவதில்லை என்று அவரது குடும்பத்தினர் பெற்றுக்கொள்ள மறுத்தனர்.
இதையடுத்து, ஒருவார காலமாக சசிபெருமாள் உடல் மருத்துவமனையில் இருந்தது. இந்நிலையில், வியாழக்கிழமையன்று உண்ணாவிரதத்தில் இருந்த சசிபெருமாளின் மூத்த மகன் விவேக்கிடம் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளன், இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன், மனித நேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா ஆகியோர், உடலை பெற்றுக் கொள்ளுமாறு கோரிக்கை விடுத்தனர்.

இதையடுத்து, சசிபெருமாள் உடலை பெற்றுக்கொள்ள அவரது குடும்பத்தினர் சம்மதித்தனர். இன்று காலை சசிபெருமாள் உடல் கொண்டு வரப்பட்டு, சேலம் மாவட்டம், இளம்பிள்ளை அருகேயுள்ள இ.மேட்டுக்காட்டில் உள்ள அவரது வீட்டில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தது.

அங்கு தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின், தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், தமிழர் வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன் உள்ளிட்ட.பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர். அதன் பின்னர் மாலையில், சசிபெருமாளின் உடல் அவரது வீட்டின் அருகே அடக்கம் செய்யப்பட்டது.












Click it and Unblock the Notifications