தினகரனின் ஆகஸ்ட் புரட்சி... அதிமுக அலுவலகத்திற்கு மல்லுக்கட்டு- போலீஸ் அலர்ட்
அதிமுக தலைமை அலுவலகத்திற்கு தினகரனும் அவரது ஆதரவாளர்களும் வரப்போவதாக தகவல் வெளியானதை அடுத்து போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
சென்னை: டிடிவி தினகரனின் அதிரடி பேட்டிகளால் அதிமுகவின் ஓபிஎஸ், ஈபிஎஸ் அணிகள் அவசர ஆலோசனைகள் நடத்தி வரும் நிலையில் அதிமுக தலைமை அலுவலகத்திற்கு போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
இரட்டை இலை சின்னமும், அதிமுக கட்சியும் கொடியும் யாரிடம் இருகிறதோ அவரே உண்மையான அதிமுக. அவர்களுக்கே அதிமுக தலைமை அலுவலகம் சொந்தம்.
இன்றைய சூழ்நிலையில் அதிமுக அலுவலகத்திற்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, அமைச்சர்கள், அவரது ஆதரவு எம்எல்ஏக்கள் மட்டுமே உரிமையோடு சென்று வருகின்றனர்.
எங்களுக்கே சொந்தம்
தொண்டர்கள் அண்ணன் ஓபிஎஸ் பக்கமே இருக்கின்றனர். நாங்கள்தான் உண்மையான அதிமுக. அதிமுக தலைமை அலுவலகம் எங்களுக்கு சொந்தமாகும் காலம் வெகு தொலைவில் இல்லை என்று கூறியுள்ளார் ஓபிஎஸ் ஆதரவாளரும் முன்னாள் அமைச்சருமான மாஃபா பாண்டிராஜன்.
டிடிவி தினகரன் பேட்டி
அதே நேரத்தில் டிடிவி தினகரனும் கட்சியை வலுப்படுத்த இன்னும் சில தினங்களில் இருந்து கட்சிப்பணியாற்றுவேன் என்று கூறியுள்ளார். இதன் மூலம் அதிமுக தலைமை அலுவலகத்திற்கு டிடிவி தினகரன் வருவது உறுதியாகியுள்ளது.
அண்ணன் எடப்பாடியார்
அதிமுகவையும், ஆட்சியையும் முதல்வர் அண்ணன் எடப்பாடி பழனிசாமி தான் வழிநடத்துவார் என அமைச்சர் ஜெயக்குமார் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். அதே நேரத்தில் அணிகள் இணைப்பு வெகு விரைவில் நடைபெறும், அதைத்தான் தொண்டர்கள் விரும்புகின்றனர் என்று கூறியுள்ளார் ஜெயக்குமார்.
இன்னும் 2 நாளில்
அணிகள் இணைய தினகரன் கொடுத்த கெடு இன்னும் 2 நாட்களில் முடிவடைய உள்ளதால் ஆகஸ்ட் 5ஆம் தேதியன்று சென்னை அதிமுக தலைமை அலுவலகத்திற்கு வந்து கட்சிப் பணிகளை தொடங்குவார் என்று தினகரன் ஆதரவாளர்கள் கூறியுள்ளனர்.
தினகரன் ஆதரவாளர்கள்
இதனால் அதிர்ச்சியடைந்த எடப்பாடி பழனிசாமி, அதிமுக தலைமை அலுவலகத்தில் கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். டிடிவி தினகரன் ஆதரவாளர்கள் தென் மாவட்டங்களில் இருந்து சென்னைக்கு வரத் தொடங்கியுள்ளனர். ஒருவேளை 5ஆம் தேதி தினகரன் தனது ஆதரவாளர்களுடன் கட்சி அலுவலகத்திற்குள் நுழைந்தால் அவரை கைது செய்வதா என்பது பற்றியும் ஆலோசிக்கப்பட்டதாம்.
சித்தியிடம் ஆலோசனை
பெங்களூரு சிறையில் உள்ள சசிகலாவிடம் ஆலோசனை நடத்த செல்லும் டிடிவி தினகரன் கட்சியை வழிநடத்துவது பற்றியும் மேற்கொள்ள வேண்டிய முக்கிய நடவடிக்கைகள் பற்றியும் ஆலோசிக்க உள்ளார். அதன் பின்னரே அவர், தனது முடிவை ஆதரவாளர்களிடம் தெரிவிப்பார்.
போலீஸ் குவிப்பு
உச்சக்கட்ட பரபரப்பில் உள்ளது அதிமுக தலைமை அலுவலகம். ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். ஆவணங்கள் அனைத்தும் பத்திரப்படுத்தப்பட்டுள்ளன. ஆகஸ்ட் 5ஆம் தேதி எதுவும் நடக்கலாம். அதற்குள் அணிகள் இணைந்து விட்டால் அது தமிழக அரசியலில் மிகப்பெரிய திருப்புமுனையாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.