பேரறிவாளனுக்காக குரல் கொடுத்த தம்பி விஜய் சேதுபதிக்கு என் அன்பும் பாராட்டும்!- சீமான்
சென்னை: பேரறிவாளனை விடுதலை செய்யக் கோரி நடத்தப்படும் வாகன பேரணிக்கு ஆதரவாகப் பேசியுள்ள நடிகர் விஜய் சேதுபதிக்கு பாராட்டுத் தெரிவித்துள்ளார் நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான்.
பேரறிவாளனின் விடுதலைக்காக நடத்தப்படும் பேரணி குறித்து கருத்து தெரிவித்துள்ள நடிகர் விஜய் சேதுபதி, "பேரறிவாளன் 25 வருடங்களாக சிறையில் வாடிக் கொண்டிருக்கிறார் என்பது நம் அனைவருக்கும் தெரியும். அதுவும் தனிமைச் சிறையில் இத்தனை ஆண்டுகளாக இருந்து வருகிறார்.
அவரை விசாரணை செய்த போலீஸ் அதிகாரியும், 'பேரறிவாளன் நிரபராதி' என சொல்லியிருக்கிறார்.
பிறகு ஏன் அவரை விடுதலை செய்ய இவ்வளவு நாள் தாமதம் என்று தெரியவில்லை. 25 வருடங்கள் தனிமைச் சிறை என்பது மிகவும் கொடுமையானது. அவரை விடுதலை செய்வதற்காக வேலூரில் இருந்து கிளம்பும் பேரணியில் நாம் அனைவரும் பங்கெடுக்க வேண்டும். பேரணிக்கு அனுமதி கொடுத்த தமிழக அரசுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்," என்று கூறியிருந்தார்.
விஜய் சேதுபதியின் இந்த ஆதரவு குறித்து தனது முகநூல் பதில் சீமான் இப்படிக் குறிப்பிட்டுள்ளார்:
"முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிக்குண்டு 25 வருடமாக விடுதலைக்காகக் காத்துநிற்கும் என் தம்பிகள் மற்றும் அக்கா நளினி ஆகியோரின் விடுதலைக்காகக் குரல் கொடுத்த என் ஆருயிர் தம்பி விஜய் சேதுபதிக்கு என் அன்பும் பாராட்டுகளும்..தொடர்ந்து போராடி எழுவரை மீட்போம்..
அன்பின் நெகிழ்ச்சியோடு,
சீமான்..."