இவர்தாங்க "அந்த" நடராஜன்...!
சென்னை: முதல்வர் ஜெயலலிதா ஆட்சி குறித்து விமர்சித்துப் பேசியது நான். ஆனால் டிவி நிறுவனம் செய்த தவறால் முன்னாள் டிஜிபி ஆர். நடராஜ் சிக்கலைச் சந்தித்து விட்டார் என்று கூறியுள்ளார் மூத்த பத்திரிகையாளர் ஆர். நடராஜன்.
தமிழ்நாடு மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த தமிழ் கூறும் நல்லுலகும் மொத்தமாக கூடி கும்மியடித்துக் கொண்டிருக்கிறது அதிமுகவின் கோமாளித்தனத்தை. யாரோ பேசியதற்காக எங்கேயோ ஒரு ஓரமாக நின்று பராக்குப் பார்த்துக் கொண்டிருந்த மாஜி டிஜிபி நடராஜைப் பிடித்து கட்சியை விட்டு நீக்கிய ஜெயலலிதாவின் செயலை பலரும் சிரித்து சிரித்து ரசித்து வருகின்றனர்.
இந்த சர்ச்சைக்கு காரணம் தந்தி டிவி ஒளிபரப்பிய பேட்டிதான். 12-ம் தேதி காலை 8.15 மணிக்கு ஒளிபரப்பான வெள்ள நிவாரணம் குறித்த அரசின் செயல்பாடுகளைப் பற்றி தொலைபேசியில் கருத்துக் கூறினார் மூத்த பத்திரிகையாளர் ஆர். நடராஜன். அப்போது அவரது பெயருக்குப் பதில் மாஜி டிஜிபி ஆர் நடராஜ் என்று பெயரைப் போட்டு விட்டது தந்தி டிவி.
இதனால் அதிமுக வட்டாரம் அதிர்ந்து போனது. நடராஜுக்கு ஆப்பு வைக்கக் காத்திருந்த கட்சிக்குள் சிலர் உடனடியாக "அம்மா" காதுக்கு இதைக் கொண்டு செல்ல உடனே கட்சியை விட்டுத் தூக்கி விட்டார் ஜெயலலிதா. விசாரிக்கக் கூட இல்லையாம்.
இந்த நிலையில் ஆர். நடராஜின் நிலை குறித்து தொலைபேசியில் பேட்டி அளித்த பத்திரிகையாளர் ஆர். நடராஜன் கருத்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து இந்து நாளிதழுக்கு அவர் அளித்துள்ள பேட்டியில், 2004-ம் ஆண்டில் சுனாமி வந்த போது தமிழக அரசு செயல்பட்ட அளவுக்கு இந்த மழை வெள்ளம் வந்தபோது செயல்படவில்லை. கீழ்மட்ட அதிகாரிகள் முதல், உயர்மட்ட அதிகாரிகள் வரை ஒவ்வொருவரும் எதுவும் செய்ய முடியாமல் மேலிருந்து வரப்போகும் கண்ணசைவுக்காகவும் உதட்டசைவுக்காகவும் காத்திருந்தார்கள் என்று தொலைபேசி நேர்காணலில் நான் கூறினேன்.
எனது உரையாடல் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும்போதே, திரையில் எனது படத்துக்குப் பதிலாக முன்னாள் டிஜிபி ஆர்.நட்ராஜ் படத்தை ஒளிபரப்பினர். அதை பார்த்த நான், எனக்கு பதிலாக தவறுதலாக முன்னாள் டிஜிபி படத்தைக் காட்டுகிறார்கள். அவர்மேல் ஏதும் ஆட்சியாளர்கள் நடவடிக்கை எடுத்துவிடப் போகிறார்கள் என்று நண்பர்களிடம் ஆதங்கப்பட்டேன். அது போலவே இப்போது நடந்துவிட்டது என்றார்.
படம்: இந்து