நடிகர் திலகம் சிவாஜிகணேசனுக்கு மணிமண்டபம் அமைக்க வலியுறுத்தி ரசிகர்கள் உண்ணாவிரதம்
சென்னை: நடிகர் திலகம் சிவாஜிகணேசனுக்கு மணிமண்டபம் அமைக்க தமிழக அரசை வலியுறுத்தி சென்னையில் சிவாஜி சமூக நலப்பேரவை சார்பில் இன்று உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.
இதில் சிவாஜி ரசிகர் மன்றத்தலைவர் சந்திரசேகரன், காங்கிரஸ் கட்சியின் தேசிய செயலாளர் திருநாவுக்கரசர், தமிழக பாஜக தலைவர் தமிழிசை செளந்தர்ராஜன், தமிழ் மாநில துணைத்தலைவர் ஞானசேகரன், சி.பி.எம். பீமாராவ் எம்.எல்.ஏ, தமிழக காங்கிரஸ் துணைத்தலைவர் வசந்தகுமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டு கண்டன உறையாற்றினர்.
இந்த நிகழ்ச்சியில் பேசிய காங்கிரஸ் கட்சியின் திருநாவுக்கரசர், நமது நடிகர் திலகம் சிவாஜி அவர்கள் உலகம் போற்றும் ஒரு உன்னத மனிதராக வாழ்ந்தவர். சினிமாவில் நடிக்கும் ஒவ்வொரு நடிகரும் அவரது சாயல் இல்லாமல் நடிக்க முடியாது.
சினிமா பல்கலைக் கழகம்
சினிமாவின் பல்கலைகழகமாக திகழ்ந்தவர், இந்த உலகில் சினிமாவும் மனித உயிர்கள் உள்ளவரை சிவாஜி வாழ்வார். காலத்தால் அழிக்கமுடியாதவர் அவர். அப்படிபட்ட மனிதருக்கு அரசு மணிமண்டபம் கட்டாமல் இருப்பது வேதனை அளிக்கிறது.
காதலர்கள்போல..
நடிகர் திலகம் சிவாஜிக்கும், தலைவர் எம்.ஜி.ஆருக்கும் பிரச்சனை என்று என்னென்னமோ சொல்வார்கள். ஆனால் நான் பார்த்த வரையில் இருவரும் காதலர்களை போல தான் பழகினார்கள்.
நடிகர் சங்கம்
தென்னிந்திய நடிகர் சங்க நண்பர்கள் நினைத்தால் கூட சுலபமாக கட்டி முடிக்கலாம். அனைத்து நடிகர்களையும் ஒன்றினைத்து ஒருமுறை கலை நிகழ்ச்சி நடத்தினாலே மண்டபத்தை கட்டிவிடலாம். அப்படி முயற்சி செய்தால் ரஜினி, கமல் போன்றவர்களை வரவழைக்க நான் ஏற்பாடு செய்கிறேன்.
முதல்வர் மனது வைக்கனுமே
அரசு நினைத்தால் ஒரே அறிக்கையில் நமது கோரிக்கையை நிறைவேற்றலாம். அதற்கு தமிழக முதல்வர் மனது வைக்க வேண்டும்.
முதல்வரின் உடல்நிலை குறித்து பத்திரிகைகளில் பல்வேறு தகவல்கள் வருகிறது. ஆனால் அவர் நலமாகத்தான் உள்ளார். தினமும் தலைமைச்செயலகம் வருகிறார். நிகழ்ச்சிகளில் கலந்துகொள்கிறார்.ஆகவே அவர் நினைத்தால் கட்டாயம் சிவாஜிக்கு மணிமண்டபம் கட்டித்தர முடியும். முதல்வர் விரைவில் நமது கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் என்று நான் வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறேன் என்றார்.