இந்திராவின் பேரனே வருக, இளம் தலைவரே வெல்க.. மதுரையில் ராகுலுக்கு, ஸ்டாலின் வெல்கம்
மதுரை: மதுரையில் திமுக மற்றும் கூட்டணி கட்சி சார்பில் நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின், காங்கிரஸ் கட்சி துணை தலைவர் ராகுல் காந்தி, காங்கிரஸ் கட்சியின் தமிழ் மாநில தலைவர் இளங்கோவன், முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரம் போன்றோர் ஒரே மேடையில் அமர்ந்து பிரசாரம் செய்தனர்.
ஸ்டாலின் பேசியதாவது: ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் இருந்தபோது, பிரதமர் எளிதாக முதல்வரை சந்திக்க முடியும். இப்போது, ஜெயலலிதாவை, பிரதமர் நினைத்தால் கூட அழைத்து பேச முடியாது. அதிமுக கட்சியின் நிர்வாகிகளே கூட ஜெயலலிதாவை பார்த்துவிட முடியாது. மாநில அமைச்சர்களாலும் சந்திக்க முடியாது.
DMK leader MK Stalin welcomes Congress vice president Rahul Gandhi at an election rally in Madurai, Tamil Nadu pic.twitter.com/gh0JFAkS7D
— ANI (@ANI_news) May 7, 2016
தமிழக வீர விளையாட்டான ஜல்லிக்கட்டை நடத்த ஜெயலலிதா அரசு தவறியுள்ளது, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க முடியவில்லை, சேது சமுத்திர திட்டத்தை நிறைவேற்ற முடியவில்லை. சேது சமுத்திர திட்டத்திற்கு எதிராக வழக்கு தொடர்ந்தவர் ஜெயலலிதா.
வேளாண்துறை வளர்ச்சியில் 21வது இடத்திற்கு தமிழகம் பின்னுக்கு தள்ளப்பட்டுள்ளது. திமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால், கட்ட பஞ்சாயத்து இருக்காது, ரவுடியிசம் இருக்காது என்று உறுதியளிக்கிறேன்.
மின்கட்டணத்தை ரூ.16 ஆயிரம் கோடி உயர்த்திய ஜெயலலிதா தற்போது மின்சாரத்தை இலவசமாக தருவதாக வாக்குறுதி அளிக்கிறார். பால் விலையை உயர்த்திய ஜெயலலிதா இப்போது குறைப்பேன் என்கிறார். மக்களை ஏமாற்ற ஜெயலலிதா போடும் கடைசி கட்ட நாடகம்தான் இது.
1980ல் நேருவின் மகளே வருகே, நிலையான ஆட்சி தருக என்று, கருணாநிதி, இந்திரா காந்தி அம்மையாரை பார்த்து அழைப்பு விடுத்தார். இதை தொடர்ந்து 2004ல் இந்திராவின் மருமகளே வருக, இந்தியாவின் திருமகளே வெல்க என அன்னை சோனியா காந்தியை வரவேற்றவரும் கருணாநிதிதான்.
இப்போது, கருணாநிதி சார்பில் நான் கூறுகிறேன், "இந்திராவின் பேரனே வருக, இந்தியாவின் இளம் தலைவரே வருக". இவ்வாறு ஸ்டாலின் பேசினார்.