3க்கு 3 சரியாப் போச்சு... ஜெ. சமாதியில் 3 அடி அடித்து சபதம் போட்ட சசி.. 3 முறை வணங்கிய இபிஎஸ்
அதிமுக அணிகள் இணைந்த பிறது ஜெயலலிதா சமாதி வந்த முதல்வர் பழனிசாமி 3 முறை மண்டியிட்டு வணக்கம் செலுத்திவிட்டு சென்றுள்ளார்.
Recommended Video
சென்னை : கட்சியை கட்டிக் காப்பேன் என்று ஜெயலலிதா சமாதியில் 3 முறை அடித்து சபதம் போட்ட சசிகலாவின் செயலுக்கு எதிர்மறையாக அவரை விடுத்து கட்சியை ஒருங்கிணைத்த முதல்வர் பழனிசாமி அதே ஜெயலலிதா சமாதியில் 3 மறை மண்டியிட்டு வணங்கிவிட்டு சென்றுள்ளார்.
ஜெயலலிதா காலமான உடனே கட்சியினரை வைத்து கெஞ்சல் நாடகம் நடத்தி கட்சியை கைப்பற்றிய சசிகலா, முதல்வராக முயற்சித்தார். ஆனால் பழம் கனிந்து வரும் சமயத்தில் தடியால் அடித்தது போல சொத்து குவிப்பு வழக்கில் தண்டனை உறுதி செய்யப்பட சிறைக்கு சென்றுவிட்டார் சசிகலா.
பிப்ரவரி 14ம் தேதி சிறைக்கு செல்லும் முன்னர் ஜெயலலிதா சமாதியில் சசிகலா சபதம் ஏற்றார். இதற்கு பல அர்த்தங்கள் கற்பிக்கப்பட்டன. துரோகிகளிடமிருந்து கட்சியை காப்பாற்றி சிறப்பாக கட்சியை வழிநடத்துவேன் என்று சசிகலா 3 முறை சமாதியில் ஓங்கியடித்து சபதம் செய்ததாக கூறப்பட்டது. ஆனால் ஜெயலலிதாவின் ஆன்மா சசிகலா கட்சிக்கும் பதவிக்கும் வருவதை விரும்பாமலே அவரை சிறைக்கு அனுப்பிவிட்டது என்றும் கூறப்பட்டன.
சமாதியில் உதயமான எதிர்ப்பு
முன்னதாக ஜெயலலிதாவின் சமாதியில் பிப்ரவரி மாதம் 7ம் தேதி மாலை தியானம் செய்து விட்டு அதிரடி திருப்பத்தை அறிவித்தார் ஓ.பன்னீர்செல்வம் . ஜெயலலிதாவின் ஆன்மா உந்தியதாலேயே சமாதிக்கு வந்ததாகவும், நிர்ப்பந்தம் காரணமாகவே முதல்வர் பதவியை ராஜினாமா செய்ததாகவும் அறிவித்து தனி அணியாக செயல்பட்டார்.
2 நாட்கள் நடந்த இழுபறி
ஆனால் இரு அணிகள் இணைப்புக்கு கட்டியம் கட்டுவது போல முதல்வர் பழனிசாமி கடந்த வாரம் புதிய அறிவிப்புகளை வெளியிட்டார். இதனையடுத்து இணிகள் இணைப்பு நடக்கும் என்ற எதிர்பார்ப்பில் ஜெயலலிதாவின் சமாதி கடந்த வெள்ளிக்கிழமை அலங்கரிக்கப்பட்டது, தொண்டர்களும் குவிந்தனர். ஆனால் இழுபறி காரணமாக அன்று அணிகள் இணைப்பு நடக்கவில்லை.
இணைந்த இலைகள்
இந்நிலையில் இன்று அதிமுக தலைமை அலுவலகத்தில் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் முதல்வர் பழனிசாமி கைகுலுக்கி அணிகள் இணைப்பை அறிவித்தன. இதே போன்று ஓ.பன்னீர்செல்வத்திற்கு துணை முதல்வர் பதவி, மாஃபா பாண்டியராஜனுக்கு அமைச்சர் பதவி என்று அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன. இதே போன்று ஓ.பிஎஸ் அணியைச் சேர்ந்த கே.பி.முனுசாமி கட்சியின் துணை ஒருங்கிணைப்பாளர் என்று பதவிகளும் பொறுப்புகளும் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளன.
3 முறை மண்டியிட்ட பழனிசாமி
சமாதியில் இருந்து கிளம்பிய எதிர்ப்பு அரசியல் இன்று ஜெயலலிதா சமாதியிலேயே முடிவு கண்டுள்ளது. பல்வேறு இழுபறி நிலைகளைத் தாண்டி சசிகலா குடும்பத்தை ஒதுக்கிவைத்துவிட்டு அதிமுகவின் எடப்பாடி பழனிசாமி அணி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் அணி இணைந்துள்ளது. இதில் அனைவரும் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால், கட்சியை தனது தலைமையில் கட்டிக் காப்பேன் என்று ஜெ. சமாதியில் 3 முறை அடித்து சபதம் செய்தார் சசிகலா. ஆனால் அவரை ஒதுக்கி வைத்துவிட்டு இரண்டு அணிகள் இணைந்த நிலையில் முதல்வர் பழனிசாமி ஜெயலலிதா சமாதியில் 3 முறை மண்டியிட்டு வணங்கினார்.