சிலை கடத்தல்... போலீசுக்கு டிமிக்கு காட்டிய டிஎஸ்பி காதர் பாட்ஷா சிக்கிய கதை
சாமி சிலைகளை கடத்தல்காரர்களிடம் பல கோடி ரூபாய்க்கு விற்பனை செய்து விட்டு தலைமறைவாக வாழ்ந்து வந்த டிஎஸ்பி காதர்பாட்ஷாவை கும்பகோணத்தில் மடக்கி பிடித்து கைது செய்துள்ளனர் காவல்துறையினர்.
சென்னை: காவல்துறையினருக்கு போக்கு காட்டிவிட்டு தலைமறைவாக இருந்த டிஎஸ்பி காதர்பாட்ஷாவை கும்பகோணத்தில் கைது செய்து திருச்சி சிறையில் அடைத்துள்ளனர்.
கடந்த 2008ஆம் ஆண்டு அருப்புக்கோட்டை ஆலடிப்பட்டி ஆரோக்கியராஜ் வீடு கட்ட அஸ்திவாரம் தோண்டினார். அப்போது 6 பழங்கால சிலைகள் கிடைத்தன
இந்த சிலைகளை ஆரோக்கியராஜ் விற்கும் முயற்சியில் ஈடுபட்டிருந்தார். இது குறித்து தகவல் கிடைக்க போலீஸ் அதிகாரிகள் காதர் பாட்ஷா, சுப்புராஜ் ஆகியோர் ஆரோக்கியராஜிடம் இருந்து சிலைகளை பறிமுதல் செய்து கடத்தி வந்தனர்.
கடத்தி வந்த சிலைகளை நீதிமன்றத்தில் ஒப்படைக்காமல் சென்னை ஆழ்வார்பேட்டை சிலை கடத்தல் மன்னன் தீனதயாளனிடம் விற்றுவிட்டனர்.

யானை ராஜேந்திரன் வழக்கு
சிலை கடத்தல் குறித்து சிலை கடத்தல் தடுப்பு பிரிவு முன்னாள் காவலர் ஒருவர் எழுதிய கடிதத்தை அடிப்படையாக கொண்டு வழக்கறிஞர் யானை ராஜேந்திரன் என்பவர், சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு வழக்கு தொடர்ந்தார்.

6 கோடிக்கு விற்பனை
சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஆய்வாளராக இருந்த போது காதர் பாட்ஷா, உதவி ஆய்வாளர் சுப்புராஜ் ஆகியோர் அவற்றை 6 கோடி ரூபாய்க்கு விற்றுவிட்டதாகவும், ஆனால் அவர்களுக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளதாகவும் மனுதாரர் தனது மனுவில் குறிப்பிட்டிருந்தார்.

பொன். மாணிக்கவேல் விளக்கம்
இந்த வழக்கு கடந்த ஜ விசாரித்த நீதிபதி மகாதேவன் பிறப்பித்த உத்தரவின்படி, சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐ.ஜி பொன்.மாணிக்கவேல் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி அறிக்கை தாக்கல் செய்தார். உதவி ஆய்வாளர் சுப்புராஜ் கைது செய்யப்பட்டுள்ளதாக கூறினார்.

நீதிபதி உத்தரவு
அப்போது, நீதிபதி மகாதேவன், சாதாரண மக்களை உடனடியாக கைது செய்யும் காவல்துறை, சிலைக்கடத்தலில் ஈடுபட்ட தங்கள் துறையை சேர்ந்த டி.எஸ்.பி. காதர் பாட்ஷாவை கைது செய்யாதது ஏன் என கேள்வி எழுப்பினார். மேலும், டி.எஸ்.பி காதர் பாட்ஷாவை கைது செய்ய எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பாக திருவள்ளூர் மாவட்ட எஸ்.பி. பதிலளிக்க உத்தரவிட்டார்.

தலைமறைவான காதர் பாட்ஷா
சிலை கடத்தல் வழக்கில் தொடர்புடைய டிஎஸ்பி காதர் பாட்ஷா பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக, உயர்நீதிமன்றத்தில், தமிழக அரசு சார்பில் விளக்கம் அளித்தது. போலீஸ் நடவடிக்கை தீவிரமடைந்ததால் தற்போது திருவள்ளூரில் பணியாற்றும் டிஎஸ்பி காதர் பாட்ஷா தப்பி ஓடி தலைமறைவானார்.

பொன். மாணிக்கவேல் மாற்றம்
இதனிடையே சிலை கடத்தல் வழக்குகளை விசாரித்து வந்த பொன். மாணிக்கவேல், ரயில்வே துறை ஐஜியாக மாற்றப்பட்டார். பொன்.மாணிக்கவேல், சிலை கடத்தல் தொடர்பான வழக்கை விசாரிக்க வேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

சிலை கடத்தல் வழக்குகள்
சிலை கடத்தல் தொடர்பான வழக்குகள் அனைத்தையும் கும்பகோணம் நடுவர் நீதிமன்றம் விசாரிக்க வேண்டும். வெவ்வெறு நீதிமன்றங்களில் நிலுவையிலுள்ள சிலைக் கடத்தல் தொடர்பான அனைத்து வழக்குகளையும் கும்பகோணம் நீதிமன்றத்துக்கு மாற்ற வேண்டும் என்று உத்தரவிட்டார்.

உள்துறை செயலர் உத்தரவு
நீதிமன்ற உத்தரவை அடுத்து ரயில்வே ஐஜியாக இருந்து வரும் பொன். மாணிக்கவேல் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐஜியாக கூடுதல் பொறுப்பு வகிப்பார் என்று தமிழக உள்துறை செயலாளர் நிரஞ்சன் மார்டி கடந்த வாரம் உத்தரவிட்டார். சிலை தடுப்பு பிரிவு ஐஜியாக இருந்த ஆர்.தமிழ்சந்திரன் திருச்சி ஆயுதப்படை ஐஜியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.

காதர் பாட்ஷா கைது
இதனையடுத்து தலைமறைவாக இருந்த காதர்பாட்ஷாவை தேடும் பணி தீவிரமடைந்தது. கும்பகோணத்தில் பதுங்கியிருந்த காதர்பாட்ஷாவை, சிலை கடத்தல் தடுப்பு பிரிவு காவல்துறையினர் கைது செய்தனர். அவர் மீது 13 பிரிவுகளில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. திருச்சி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் காதர் பாட்ஷா.












Click it and Unblock the Notifications