மேலூர் கூட்டத்தில் என்னை தவறாக பேசிவிட்டார் தினகரன்... எம்எல்ஏ ராமச்சந்திரன் கொதிப்பு
நேற்று நடந்த மதுரை மேலூர் எம்ஜிஆர் நூற்றாண்டு விழா பொதுக்கூட்டத்தில், தினகரன் என்னைப் பற்றி தவறான கருத்தைத் தெரிவித்துள்ளார் என்று குன்னம் தொகுதி எம்.எல்.ஏ. கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை: மேலூர் எம்ஜிஆர் நூற்றாண்டு விழா பொதுக் கூட்டத்தில் டிடிவி தினகரன் என்னைப் பற்றி தவறான கருத்தைத் தெரிவித்துள்ளார் என்று குன்னம் தொகுதி எம்.எல்.ஏ. ராமச்சந்திரன் கூறியிருக்கிறார். இது அதிமுக வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
குன்னம் எம்.எல்.ஏ. ராமச்சந்திரன் சென்னை சேப்பாக்கத்தில் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார். அப்போது அவர் கூறுகையில், " அ.தி.மு.க அரசை மிரட்டும் வகையில் டிடிவி தினகரன் செயல்படுகிறார். ஆட்சியைக் கலைக்கும் நோக்கத்தில் தினகரன் செயல்படுகிறார்.
மேலூர் பொதுக்கூட்டத்தில், என்னைப் பற்றி தினகரன் தவறான கருத்தைத் தெரிவித்து உள்ளார். கட்சியைக் கைப்பற்ற நினைத்ததால் கட்சியில் இருந்து டிடிவி தினகரனை நீக்கினார் ஜெயலலிதா.
அ.தி.மு.க.வில் தொண்டனாக கூட டிடிவி தினகரன் இருந்தது இல்லை. அதிமுகவிற்காக எத்தனை முறை சிறை சென்றீர்கள் என்பதைத் தினகரன் அடுத்த கூட்டத்தில் தெரிவிக்க வேண்டும். அந்நிய செலாவணி மோசடியில் சிங்கப்பூரில் கைது செய்து அழைத்து வரப்பட்டவர் டிடிவி தினகரன்.
சசிகலா, டிடிவி தினகரன் குடும்பத்தினரால் தான் ஜெயலலிதா சிறைக்கு சென்றார். இமை போல் காக்காததால் தான் ஜெயலலிதா இவ்வளவு சீக்கிரம் மரணம் அடைந்தார். டிடிவி தினகரன் வாரிசு அரசியல் செய்து கொண்டு இருக்கிறார். டிடிவி தினகரனை சந்திக்கக் கூடாது எனக் கூறியவரே திவாகரன் தான்.
கமல்ஹாசன் ஒரு டுவிட்டர் அரசியல்வாதி. அவர் அரசியலுக்கு வந்து விளையாடட்டும் அப்போது பார்க்கலாம் " என்று தெரிவித்தார் ராமச்சந்திரன்.
மேலும் அவர், " திவாகரனின் மகன் ஜெயந்த் ஆனந்த், மேலூர் கூட்டத்தில் முன்னிலைப் படுத்தப்பட்டது ஏன்?" என்றும் கேள்வி எழுப்பினர். அதிமுகவில், " பதவிகளை தினகரன் மட்டும் அல்ல சசிகலா குடும்பமே விற்பனை செய்ததாகவும்" குன்னம் எம்எல்ஏ குற்றம்சாட்டினார்.