விசிக வேட்பாளர்கள் 2 பேர் அதிரடி மாற்றம்...வானூரில் ரவிக்குமார் போட்டி !
சென்னை: விடுதலை சிறுத்தைகள் கட்சி இன்று மானாமதுரை, வானூர் ஆகிய இரண்டு தொகுதிகளில் தனது வேட்பாளர்களை மாற்றியுள்ளது. அக்கட்சியின் பொதுச்செயலரான எழுத்தாளர் ரவிக்குமார் வானூர் தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
தேமுதிக- மக்கள் நலக் கூட்டணி- தமாகா அணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு 25 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. அதன்படி விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் போட்டியிடும் 25 வேட்பாளர்களின் பட்டியலை இரண்டு கட்டங்களாக திருமாவளவன் வெளியிட்டார்.
இந்நிலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி இன்று 2 தொகுதிகளில் தனது வேட்பாளர்களை மாற்றியுள்ளது.
இதுகுறித்து கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில், மானாமதுரை சட்டசபை தொகுதியில் கு.கா.பாவலன் போட்டியிடுவார் என்று ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது மாற்றப்பட்டு அவருக்குப் பதிலாக சிவகங்கை மாவட்ட தெற்கு மாவட்டச் செயலாளரான தீபா என்கிற திருமொழி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
வானூர் தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருந்த ம.தமிழ்செல்வன் மாற்றப்பட்டு கட்சியின் பொதுச் செயலாளர் துரை.ரவிக்குமார் புதிய வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.