தமிழக வெள்ள நிவாரணம்... ஆனந்த விகடன் ரூ 1 கோடி அறிவிப்பு!
சென்னை: தமிழக வெள்ள நிவாரண நிதியாக ரூ 1 கோடியை பிரபல ஊடக நிறுவனமான ஆனந்த விகடன் அறிவித்துள்ளது.
சமீபத்தில் சென்னையைக் கடுமையாகத் தாக்கிய மழை வெள்ள பாதிப்புகளுக்கு நிவாரணமாக ஏராளமானோர் தங்களால் இயன்ற நிதியை வழங்கி வருகின்றனர்.
திரையுலகைச் சேர்ந்த நடிகர் நடிகைகள் தங்கள் பங்களிப்பைச் செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் தமிழ் பத்திரிகையுலகில் தனித்துவம் மிக்கதாய் திகழும் ஆனந்த விகடன் நிறுவனம் தனது பங்களிப்பாக ரூ 1 கோடியை நிவாரண நிதியாக இன்று அறிவித்துள்ளது.
இதுகுறித்து விகடன் வெளியிட்டுள்ள அறிவிப்பில், "உண்மையில் இந்தப் பேரிடரில் இருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய படிப்பினை என்ன? நீர் பாயும் ஆறுகளை, நீர் தேங்கும் ஏரிகளை, நீர் வழிந்தோடும் வடிகால்களை ஆக்கிரமித்து கட்டடக் காடுகளாக மாற்றிய கொடுங்குற்றத்துக்கு இயற்கையின் சீற்றம் தந்த தண்டனை இது என்ற பேருண்மையை உணர வேண்டிய தருணம். தனி மனிதர்கள் தொடங்கி அரசு வரையிலும் இந்தப் படிப்பினைகளை மனதில்கொண்டு, திருந்தவும் திருத்தவுமான நடவடிக்கைகளை போர்க்கால அடிப்படையில் துரிதப்படுத்த வேண்டும்.
முதலில், இயற்கை வளங்களைப் பாதுகாக்க வேண்டியதன் அவசியம் குறித்தும், அதற்கு மேற்கொள்ள வேண்டிய வழிமுறைகள் குறித்தும் மக்களிடம் பெரும் மனமாற்றத்தை நிகழ்த்த வேண்டியிருக்கிறது. இதற்காக நிலம், நீர் தொடர்பான பல்வேறு நிபுணர்களுடன் ஆலோசனை நடத்தி, தீர்வின் தடம் நோக்கி நகர வேண்டியிருக்கிறது. லாபவெறிக்காக நீர்நிலைகளைக் கொன்றொழிக்கும் அதிகார, அரசியல் வர்க்கத்தினரை மக்கள் மன்றத்தில் அம்பலப்படுத்த வேண்டியிருக்கிறது. ஒருபக்கம் நீர்நிலைகளைப் பாதுகாப்பது, மறுபக்கம் ஆக்கிரமிக்கப்பட்ட நீர்நிலைகளை மீட்டெடுப்பது என்ற இரட்டை நடவடிக்கைகளை இணைந்து மேற்கொள்ள வேண்டியிருக்கிறது.
தமிழகத்தின் நலன் காக்கும், தமிழர்களின் சந்ததி காக்கும் இந்த நிரந்தரத் தீர்வுக்கான போரை வீரியத்துடன் முன்னெடுக்கக் களம் இறங்குகிறது நம் விகடன் குழுமம். இதன் முதல் கட்டமாக விகடன் நிறுவனம் சார்பில் ஒரு கோடி (1,00,00,000) ரூபாய் நிதியை வழங்குகிறோம். இது ஆரம்பம்தான். விவரங்கள் விரைவில்!" என்று குறிப்பிட்டுள்ளது.
விகடன் மூலம் வெள்ள நிவாரணத்துக்கு உதவ விரும்புபவர்கள், தனது வாசன் சாரிடபிள் ட்ரஸ்ட்-டுக்கு நிதி அனுப்பலாம் என்றும் கோரிக்கை விடுத்துள்ளது.