சரத்குமார் போல பிரிந்து சென்றவர்கள் வந்தால் மனதார வரவேற்கிறோம் - டிடிவி தினகரன்
சமக சரத்குமார் போல பிரிந்து சென்றவர்கள் மீண்டும் வந்தால் வரவேற்போம் என்று டிடிவி தினகரன் கூறியுள்ளார்.
சென்னை: சரத்குமாரைப் போல பிரிந்து சென்றவர்கள் மீண்டும் எங்களுடன் இணைய விரும்பினால் அவர்களை வரவேற்போம் என்று அதிமுக அம்மா கட்சி வேட்பாளர் டிடிவி தினகரன் கூறியுள்ளார்.
சமக தலைவர் சரத்குமார் கடந்த 2011ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்து இரட்டை இலை சின்னத்தில் தென்காசி தொகுதியில் போட்டியிட்டு வென்றார். முதன்முறையாக எம்எல்ஏவாக சட்டசபைக்குள் நுழைந்தார்.
அதிமுகவின் அறிவிக்கப்படாத கொள்கைப் பரப்பு செயலாளராக மாறினார். இதன் பின்னர் என்ன நினைத்தாரோ கடந்த சட்டசபைத் தேர்தலின் போது தனித்து போட்டி என்று அறிவித்து கூட்டணியில் இருந்து பிரிந்தார்.
சரத்குமார்
சமத்துவ மக்கள் கட்சியே உடைந்தது. இதன் பின்னர் வேறு வழியின்றி ஜெயலலிதாவை சந்தித்தார். கூட்டணியில் போட்டியிடுவதாக கூறினார். எனினும் இரட்டை இலை சின்னத்திலேயே போட்டியிட வேண்டும் என்று ஜெயலலிதா நிபந்தனை போட்டார். அதன்படி திருச்செந்தூர் தொகுதியில் போட்டியிட்டு திமுக சார்பில் போட்டியிட்ட அனிதா ராதாகிருஷ்ணனிடம் தோல்வி அடைந்தார்.
ஜெயலலிதாவிற்குப் பின் ஓபிஎஸ்
ஜெயலலிதாவின் மரணத்திற்குப் பிறகு ஓ.பன்னீர் செல்வத்தை அவரது கிரின்வேஸ்சாலை இல்லத்திற்கே நேரில் சென்று ஆதரவு தெரிவித்தார். திடீரென்று அது நட்பு ரீதியான சந்திப்பு என்றார். ஆர்,கே.நகர் இடைத்தேர்தலில் வேட்பாளரை களமிறக்கினார். அவரது வேட்புமனு தள்ளுபடியானது. இதிலும் உள்குத்து இருப்பதாக கூறப்பட்டது.
டிடிவி தினகரன் ஆதரவு
ஆர்.கே. நகர் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் டிடிவி தினகரனை, சென்னை அடையாறில் உள்ள அவரது இல்லத்தில், சரத்குமார் இன்று நேரில் சந்தித்து தனது ஆதரவைத் தெரிவித்தார். இந்த சந்திப்பின்போது, முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி மற்றும் அமைச்சர்கள் உடனிருந்தனர்.
டிடிவி தினகரன் ஜெயிப்பார்
சந்திப்பிற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய சரத்குமார், ஆர்.கே. நகரில் டிடிவி தினகரனுக்கு ஆதரவு தருவதாக கூறினார். தமிழகத்தில் தற்போது நடைபெற்றுவரும் நல்லாட்சி தொடரவேண்டும் என தெரிவித்தார். சதிகளை முறியடித்து ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் 50,000 வாக்குகள் வித்தியாசத்தில் அண்ணன் டிடிவி தினகரன் வெற்றி பெறுவார் என்று கூறினார்.
நல்ல முடிவு
இயக்கத்தினருடன் கலந்து பேசி நல்லாட்சி தொடர நல்ல முடிவு எடுத்துள்ளோம். மக்களுக்கு சிறப்பான ஆட்சி தொடர்ந்து நடந்து கொண்டிருக்க வேண்டும். அதற்காகவே நாங்கள் ஆதரவு கொடுத்திருக்கிறோம் என்றும் கூறினார். தினகரனுக்கு ஆதரவாக ஆர்.கே.நகரில் நாளை முதல் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளதாக தெரிவித்தார்.
அண்ணன் தம்பிகள்
ஒரு குடும்பத்தில் சண்டை வந்தால் சமரசம் ஏற்படுவது இயல்புதான். அதே போல கட்சியில் இருந்து பிரிந்து சென்றவர்களுக்கு இடையே சிறு சிறு மனஸ்தாபம் ஏற்பட்டிருக்கலாம். அதே போல அனைவரும் அமர்ந்து பேசி இணைய வேண்டும் என்றார் சரத்குமார்.
வரவேற்கிறோம்
இதனைத் தொடர்ந்து பேசிய டிடிவி தினகரன், சமக தலைவர் சரத்குமாரை வரவேற்பதாக கூறினார். இதேபோல பிரிந்து சென்றவர்கள் மீண்டும் இணைய விரும்பினால் அவர்களை வரவேற்பதாகவும் டிடிவி தினகரன் கூறினார்.