ஆர்.கே.நகரில் இரட்டை இலை சின்னம் வலம் வருமா? முடங்குமா?
அதிமுக பிளவுபட்டுள்ள நிலையில் ஆர்.கே.நகர் தொகுதியில் அக்கட்சியின் அதிகாரப்பூர்வ சின்னமான இரட்டை இலை சின்னம் வலம் வருமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
சென்னை: ஆர்.கே. நகர் தொகுதி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுவிட்டது. ஆனால் ஆளும் கட்சியான அதிமுகவுக்கு அதன் இரட்டை இலை சின்னம் கிடைக்குமா? என்பதற்கு இன்னமும் விடைதான் கிடைக்கவில்லை.
ஜெயலலிதா மறைவால் ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலை எதிர்கொண்டுள்ளது. ஜெயலலிதா என்ற மிகப் பெரிய ஆளுமையின் மறைவுக்குப் பின் நடைபெறும் முதல் தேர்தல் என்பதால் அதிமுகவுக்கு இது ஆசிட் டெஸ்ட் என்பதில் சந்தேகமே இல்லை.
ஆனால் அதிமுகவே இரண்டாக பிளவுபட்டு நிற்கிறது. அத்துடன் ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் அதிமுகவின் அதிகாரப்பூர்வ சின்னமான இரட்டை இலையே களமிறங்குமா? என்ற சந்தேகமும் உள்ளது.
சசிக்கு எதிர்ப்பு
அதிமுகவின் தற்காலிக பொதுச்செயலராகத்தான் சசிகலா நியமிக்கப்பட்டுள்ளார். சசிகலாவை யார் நியமன பொதுச்செயலராக்கினார்களோ அவர்களே இன்று செல்லாது.. செல்லாது என தேர்தல் ஆணையத்துக்குப் போயுள்ளனர்.
அதிகாரம் உண்டா?
இந்த விவகாரத்தில் முடிவு வரும் வரை இரட்டை இலையின் கதி என்ன என்பது தெரியாது. தற்காலிக பொதுச்செயலர் நியமனம் செல்லும் என தேர்தல் ஆணையம் அறிவித்தாலுமே தற்காலிக பொதுச்செயலரால் வேட்பாளருக்கு சின்னம் ஒதுக்கும் படிவத்தில் கையெழுத்திடும் அதிகாரம் இருக்கிறதா? என்கிற கேள்வியும் எழுப்பபடுகிறது.
ஓபிஎஸ் அணி
சசிகலாவுக்கு சாதகமாக தேர்தல் ஆணையம் முடிவு அமைந்தாலும் ஓபிஎஸ் அணி சும்மா இருக்கப் போவதில்லை. இரட்டை இலை தங்களுக்கே சொந்தம் என உரிமை கோரும். அப்படி ஒரு நிலைமை வரும்போது இரட்டை இலை மீண்டும் முடக்கப்படும் சூழல் உருவாகும்.
இரட்டை இலை?
ஆகையால் தற்போதைய நிலையில் ஆர்.கே.நகரில் இரட்டை இலை சின்னத்துடன் ஒரு வேட்பாளர் களமிறங்குவது சாத்தியமற்ற ஒன்றாகத்தான் தெரிகிறது. இரட்டை இலைக்கே அதிகமுறை வாக்களித்த ஆர்கே நகர் தொகுதி மக்கள் இம்முறை எடுக்கப் போகும் முடிவுதான் தமிழகத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.