தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் சார்பில் ரியாத்தில் நடந்த இரத்ததான முகாம்
ரியாத்: தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் நஸீம் கிளை சார்பில் நேற்று ரியாத்தில் உள்ள கிங் ஃபஹத் மெடிக்கல் சிட்டியில் ரத்ததான முகாம் நடைபெற்றது.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் நஸீம் கிளை ஏற்பாட்டில் ரியாத் மாநகரிலுள்ள கிங் ஃபஹத் மெடிக்கல் சிட்டியில் நடைபெற்ற இம்முகாமில் 120 பேரிடமிருந்து 55 யூனிட் இரத்தம் தானமாக பெறப்பட்டது.
காலை 9.00 மணிக்கு துவங்கிய இம்முகாமில் பெண்கள் உட்பட 150க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். தமிழ் சகோதரர்களின் ஏற்பாட்டில் இந்த முகாம் நடைபெற்றாலும் தமிழகம் மட்டுமின்றி கேரளா, ஆந்திரா, உ.பி, மஹாராஷ்டிரா போன்ற பிற மாநிலங்களில் இருந்தும் பலர் இதில் கலந்து கொண்டனர்.

அதேபோன்று, இலங்கை, சிரியா, எகிப்து போன்ற பிற நாட்டவர்களுடன் சவுதி நாட்டினரும் இந்த முகாமில் கலந்து கொண்டு குருதிக் கொடையளித்தனர். மாலை 4 மணிக்கு ரியாத் மண்டல தலைவரின் நன்றியுரையுடன் இந்த முகாம் முடிவுற்றது.
இந்த முகாம் பற்றி தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் ரியாத் மண்டல தலைவர் அப்துர் ரஹ்மான் நவ்லக் குறிப்பிடும் போது, ரியாத் மண்டலத்தை போலவே சவுதி அரேபியாவிலுள்ள தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் தம்மாம், ஜித்தா போன்ற மண்டலஙகளும் வருடந்தோறும் பல இரத்ததான முகாம்களை நடத்தி வருகின்றது.

ரியாத் மண்டலம் மூலமாக ஒவ்வொரு வருடமும் 6க்கும் மேற்பட்ட முகாம்களை நடத்தி ஆயிரத்திற்கும் மேற்பட்ட யூனிட் இரத்ததானம் செய்து வருகின்றோம். முகாம்கள் மட்டுமல்லாது அவ்வபோது தேவைக்கேற்ப அவசர இரத்ததானமும் செய்து வருகின்றோம், நஸீம் கிளை சார்பாக நடத்தப்பட்ட இது ரியாத் மண்டலம் நடத்தும் 26 வது இரத்ததான முகாமாகும். அடுத்ததாக இந்திய குடியரசு தினத்தை முன்னிட்டு சவுதி அரேபியாவின் ரியாத் மாநகரில் மாபெரும் இரத்ததான முகாம் நடைபெற இருக்கிறது' என்றார்.












Click it and Unblock the Notifications