கொரோனா.. குஜராத்தில் நிலைமை சரியில்லை.. ராணுவத்தை களமிறக்க மத்திய அரசு யோசனையா? உண்மை என்ன?
குஜராத்தில் கொரோனா தீவிரம் அடைந்து வரும் நிலையில் அங்கு ராணுவம் களமிறக்கப்பட உள்ளதாக பொய்யான தகவல்கள் வெளியாகி உள்ளது.
காந்தி நகர்: குஜராத்தில் கொரோனா தீவிரம் அடைந்து வரும் நிலையில் அங்கு ராணுவம் களமிறக்கப்பட உள்ளதாக பொய்யான தகவல்கள் வெளியாகி உள்ளது.
இந்தியாவில் கொரோனா தீவிரமாக பரவி வருகிறது. இந்தியாவில் மொத்தம் 11,637 பேர் (கணக்குப்படி) கொரோனா காரணமாக பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். மேலும் 398 பேர் பலியாகி உள்ளனர்.
கொரோனா காரணமாக பாதிக்கப்பட்டு இருக்கும் மாநிலங்களில் மிக மோசமான மாநிலம்தான் குஜராத். இங்கு கொரோனா பாதிக்கப்பட்ட நபர்களின் எண்ணிக்கை அதிக அளவில் இல்லை. ஆனால் இந்தியாவில் குஜராத்தில்தான் இறப்பு விகிதம் அதிகமாக உள்ளது.

குஜராத் நிலை என்ன
குஜராத்தில் மொத்தம் 695 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதில் 59 பேர் குணப்படுத்தப்பட்டு இருக்கிறார்கள். 606 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். 29 பேர் பலியாகி உள்ளனர். இன்று மட்டும் அங்கு 45 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. குஜராத்தில் காங்கிரஸ் எம்எல்ஏ ஒருவருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. இதனால் அவரை சந்தித்த அம்மாநில முதல்வர் விஜய் ரூபாணி தற்போது தனிமைப்படுத்தப்பட்டு இருக்கிறார்.

ராணுவம் என்ன
இந்த நிலையில் குஜராத்தில் கொரோனாவை கட்டுப்படுத்த அரசு திணறுகிறது. நாளுக்கு நாள் கேஸ்களின் எண்ணிக்கை அதிகம் ஆகிறது. இதனால் குஜாரத்தில் ராணுவம் களமிறக்கப்படும். போலீசுக்கு பதிலாக ராணுவம் ரோந்து பணிகளை மேற்கொள்ளும். சாலைகளில் மக்களை சோதிக்கும் பணிகளை ராணுவம் செய்யும் என்று செய்திகள் வெளியானது.

ஏன் இப்படி
அதேபோல் முன்னாள் ராணுவ வீரர்கள், ஓய்வு பெறும் நிலையில் இருக்கும் ராணுவ வீரர்கள், விடுமுறையில் இருக்கும் ராணுவ வீரர்கள் எல்லாம் குஜராத் அனுப்பப்பட வாய்ப்புள்ளது. இவர்கள் குஜராத்தில் களமிறங்கி கொரோனா தடுப்பு பணிகளை செய்வார்கள் என்று செய்தி வெளியானது. வாட்ஸ் ஆப், டிவிட்டர் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் இந்த செய்திகள் தீவிரமாக பரவியது குறிப்பிடத்தக்கது.

உண்மை என்ன?
இந்த செய்தியை மத்திய உள்துறை அமைச்சகம் முற்றிலுமாக மறுத்துள்ளது. குஜராத்தில் ராணுவத்தை களமிறக்க நாங்கள் யோசிக்கவில்லை. குஜராத்தில் மட்டுமல்ல இந்தியா முழுக்க கொரோனா தடுப்பு பணியில் எங்கும் ராணுவத்தை களமிறக்க மாட்டோம். மாநில அரசுதான் கொரோனா பணிகளை செய்து வருகிறது. அதனால் பொய்யான செய்திகளை நம்ப வேண்டாம் என்று விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications