பழைய 500, 1,000 ரூபாய் நோட்டுகளை மாற்ற ரிசர்வ் வங்கி அறிவிப்பு வந்ததா? மத்திய அரசு விளக்கம்
சென்னை: இந்தியாவை பொறுத்தவரை பணமதிப்பு இழப்பு செய்யப்பட்டு இன்றுடன் 9 ஆண்டுகள் ஆகிவிட்டது. கடந்த 2016ம் ஆண்டு இதே நவம்பர் 8ம் தேதி பணமதிப்பிழப்பு செய்யப்பட்டது. அப்போது மதிப்பிழப்பு செய்யப்பட்ட பழைய ரூ.500, ரூ.1,000 நோட்டுகளை மாற்ற அறிவிப்பு வெளியிடப்பட்டதாக சமூக ஊடகங்களில் தகவல்கள் பரவி வருகிறது..ஆனால் பழைய 500, 1,000 ரூபாய் நோட்டுகளை மாற்ற முடியாது என்றும், இது முற்றிலும் வதந்தி என்றும் இதை நம்ப வேண்டாம் என்றும் மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.
நிறைய பேர் வீடுகளின் உண்டியலில் இருந்த பழைய நோட்டுகளை திரும்ப பெற முடியுமா என்று கேட்கிறார்கள். ஆனால் நடைமுறையில் பழைய ரூபாய் நோட்டுகளை திரும்ப வாங்கி கொள்வதற்கான காலகட்டம் எப்போதோ முடிந்துவிட்டது. ஒரு வேளை எங்காவது பெரிய அளவில் பணம் கிடைத்து, சட்ட ரீதியாக நீதிமன்ற உத்தரவு கொடுத்தால் மட்டும், பழைய நோட்டுகளை ஆர்.பி.ஐ., திரும்ப வாங்கிக் கொள்வதாக கூறப்படுகிறது. மற்றபடி அந்தப் பணத்துக்கு மதிப்பில்லை என்பதே எதார்த்தம். எங்காவது பழைய ரூபாய் நோட்டுகளை சேகரிப்பவர்கள் மட்டுமே பழைய 500, 1,000 ரூபாய் நோட்டுகளை குறைந்த விலைக்கு வாங்குகிறார்கள். பழைய 500, 1,000 ரூபாய் நோட்டுகள் விவகாரம் குறித்து சற்று விரிவாக பார்ப்போம்.

கருப்பு பணம், கள்ள நோட்டுகளை ஒழித்து பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு செல்லும் நிதியுதவியை தடுக்க வேண்டும் என்று மத்திய அரசு விரும்பியது. அத்துடன் முறையான வணிகம் மற்றும் எல்லாரும் டிஜிட்டல் பொருளாதாரத்தை நோக்கி நகர வேண்டும். யாரும் கணக்கில் வராத பணமாக, எந்த பணத்தையும் பதுக்குவது கடினம் என்கிற நிலையை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கங்களுக்காக மத்திய அரசு கடந்த 2016-ம் ஆண்டு நவம்பர் மாதம் 8-ந்தேதி பணமதிப்பிழப்பு நடவடிக்கையை அறிவித்தது. இதன்படி, அப்போது புழக்கத்தில் இருந்த 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகள் திரும்ப பெறப்பட்டு, புதிதாக முதலில் ரூ.2,000 நோட்டுகள் அறிமுகம் செய்யப்பட்டன. அதன்பின்னர் சிறிது காலம் கழித்து 500 ரூபாய் நோட்டுகள் அறிமுகம் செய்யப்பட்டது. அதன்பிறகு 200 ரூபாய் நோட்டு அறிமுகம் செய்யப்பட்டது.
இந்நிலையில் பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகளை, புதிய ரூபாய் நோட்டுகளாக மாற்றுவதற்காக பொதுமக்கள் ஏ.டி.எம்.எந்திரங்களின் முன்பும், வங்கிகளின் முன்பும் நீண்ட வரிசையில் காத்து நின்றார்கள். அந்த பிரச்சனை சரியாக கிட்டத்தட்ட ஓராண்டு வரை ஆனது. மக்கள் எப்போது ஏடிஎம்களில் பணம் கிடைக்கும் என்று தவமே இருந்தார்கள். பலர் அப்போது பெரும் அவதிப்பட்டார்கள். நோட்டை மாற்ற முடியாமல் பணக்காரர்கள் மட்டுமல்ல சாமானிய மக்கள் மிக கடுமையாக பாதிக்கப்பட்டனர்.
இந்நிலையில் பணமதிப்பு இழப்பு செய்யப்பட்ட ரூ.500, ரூ.1,000 நோட்டுகளை இன்னும் சிலர் கைவசம் வைத்திருப்பதாக கூறப்படுகிறது. வீடுகளில் எப்போதோ சேமிப்பதற்காக மறைத்து வைக்கப்பட்ட பணம், காலாவதியான பிறகு கத்தை, கத்தையாக கண்டுபிடிக்கப்பட்டு வருகிறது. இதை மாற்றி தங்களுடைய அவசர தேவைக்காக பயன்படுத்த முடியாமல் மக்கள் திணறி வருகின்றனர். ஆனால் பணமதிப்பிழப்பு செய்யப்பட்ட பணம் வெறும் காட்சி பொருளாக வைத்திருக்கிறார்கள்.
இந்த நிலையில், பழைய ரூ.500, ரூ.1,000 நோட்டுகளை மாற்றிக்கொள்ள ரிசர்வ் வங்கி புதிய வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளதாக சமூக வலைதளங்களில் ஒரு தகவல் பரவி வருகிறது. இதனை பலரும் பகிர்ந்து வருகிறார்கள். மாற்ற முடியாமல் மதிப்பிழந்த ரூபாய் நோட்டுகளை வைத்திருந்தவர்கள் உற்சாகமாக ஆச்சரியம் அடைந்தனர். ஆனால் அது பொய் என்பது தெரியவந்துள்ளது.
இதுதொடர்பாக மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது. மத்திய அரசின் பத்திரிகை தகவல் அலுவலக தகவல் சரிபார்ப்பகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், "சமூக ஊடகங்களில் பரவும் தகவல் தவறானது. ரிசர்வ் வங்கி பழைய ரூ.500, ரூ.1,000 நோட்டுகளை மாற்றம் செய்வது தொடர்பாக எந்தவித அறிவிப்பையும் வெளியிடவில்லை. நிதி ஒழுங்குமுறைகள் மற்றும் பணம் தொடர்பான அறிவிப்புகளுக்கு ரிசர்வ் வங்கியின் இணையதளம் மட்டுமே அதிகாரப்பூர்வமானது" இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Fact Check
வெளியான செய்தி
பழைய ரூ.500, ரூ.1,000 நோட்டுகளை மாற்றிக்கொள்ள ரிசர்வ் வங்கி புதிய வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளதாக சமூக வலைதளங்களில் ஒரு தகவல் பரவி வருகிறது. இதனை பலரும் பகிர்ந்து வருகிறார்கள்
முடிவு
சமூக ஊடகங்களில் பரவும் தகவல் தவறானது. ரிசர்வ் வங்கி பழைய ரூ.500, ரூ.1,000 நோட்டுகளை மாற்றம் செய்வது தொடர்பாக எந்தவித அறிவிப்பையும் வெளியிடவில்லை என மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.












Click it and Unblock the Notifications