வரலாற்று சரிவுக்குப் பின்.. மீண்டும் எகிறி அடித்த தங்கம் மற்றும் வெள்ளி.. இது லிஸ்டுலேயே இல்லையே
டெல்லி: உலகச் சந்தையை உலுக்கிய வரலாற்றுச் சரிவில் இருந்து மீண்டுள்ள தங்கம் மற்றும் வெள்ளி விலை, செவ்வாய்க்கிழமை அன்று அதிரடி ஏற்றத்தைக் கண்டுள்ளது. இந்த விலையுயர்வு, சமீபத்திய விலை வீழ்ச்சி என்பது ஒரு தற்காலிக மாற்றமே தவிர, இது நீண்ட காலச் சரிவு அல்ல என்பதை முதலீட்டாளர்களுக்கு உணர்த்தியுள்ளது. முக்கியமாக கமாடிட்டி மார்க்கெட் வேகமாக மீண்டும் முன்னேற தொடங்கி உள்ளது.
கடந்த வாரம் விலைமதிப்பற்ற உலோகங்களுக்கு ஒரு மோசமான வாரமாக அமைந்தது. கடந்த வெள்ளிக்கிழமை அன்று மட்டும் தங்கத்தின் விலை சுமார் 10% சரிந்தது, இது கடந்த பல தசாப்தங்களில் இல்லாத மிகப்பெரிய ஒருநாள் வீழ்ச்சியாகும். வெள்ளியின் நிலை இன்னும் மோசமாக இருந்தது; 30% வரை விலை சரிந்து, 1980-க்குப் பிறகு மிக மோசமான ஒருநாள் சரிவைச் சந்தித்தது.

வேகமான மீட்சி
இன்று நிலவரப்படி, சந்தை மீண்டும் சூடுபிடிக்கத் தொடங்கியது. ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 4% வரை உயர்ந்து $4,771.76-ஆக வர்த்தகமானது. வெள்ளியும் தன் பங்கிற்கு 7.8% உயர்ந்து ஒரு அவுன்ஸ் $81.30 என்ற அளவை எட்டியது.
டாய்ச் வங்கி (Deutsche Bank) நிபுணர்களின் கருத்துப்படி, இந்த விலை வீழ்ச்சி முதலீட்டாளர்களைக் கவலையடையச் செய்தாலும், தங்கம் வாங்குவதற்கான அடிப்படை காரணங்கள் இன்னும் வலுவாகவே உள்ளன. உண்மையான பொருளாதாரச் சூழலை விட, சந்தையில் நிலவிய ஒருவித பதற்றமே இந்தத் திடீர் விலை சரிவுக்குக் காரணம் என்று அவர்கள் கருதுகின்றனர்.
விலை ஏன் சரிந்தது?
இந்தத் திடீர் வீழ்ச்சிக்கு சில முக்கியமான பொருளாதாரக் காரணங்கள் கூறப்படுகின்றன:
அமெரிக்க டாலரின் மதிப்பு உயர்வு: சர்வதேசச் சந்தையில் டாலரின் மதிப்பு அதிகரித்ததால், மற்ற நாட்டு முதலீட்டாளர்களுக்கு தங்கம் வாங்குவது செலவு மிகுந்ததாக மாறியது.
அரசியல் மாற்றங்கள்: அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், கெவின் வார்ஷ் என்பவரை அடுத்த ஃபெடரல் ரிசர்வ் தலைவராகப் பரிந்துரைத்தது, வட்டி விகிதங்கள் குறித்த புதிய எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.
முதலீடுகளைக் குறைத்தல்: வார இறுதிக்கு முன்னதாகவே பல வர்த்தகர்கள் தங்கள் லாபத்தைத் தக்கவைக்க முதலீடுகளைத் திரும்பப் பெற்றனர்.
ஆனாலும், உலகளாவிய அரசியல் பதற்றங்கள் மற்றும் வங்கிகள் தங்கள் கையிருப்பைத் தக்கவைக்க எடுக்கும் முயற்சிகள் காரணமாக, தங்கத்தின் மீதான மோகம் குறையாது என்று பார்க்லேஸ் (Barclays) வங்கி ஆய்வாளர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
வெள்ளியும் தொழில்நுட்பப் புரட்சியும்
வெள்ளியின் விலை ஏற்றம் தற்போது உன்னிப்பாகக் கவனிக்கப்படுகிறது. ஏனெனில், வெள்ளி என்பது வெறும் ஆபரண உலோகம் மட்டுமல்ல, அது நவீன தொழில்நுட்ப உலகின் தவிர்க்க முடியாத தேவையாகவும் மாறியுள்ளது.
இது தொடர்பாக பொருளாதார வல்லுனர்கள் கூறுகையில், இன்றைய நவீன உலகிற்கு வெள்ளி மிகவும் அவசியமானது என்று குறிப்பிடுகிறார். குறிப்பாக பின்வரும் துறைகளில் வெள்ளியின் பங்கு முக்கியமானது:
தரவு மையங்கள் (Data Centers): செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்திற்கான உள்கட்டமைப்பை உருவாக்க வெள்ளி தேவைப்படுகிறது.
சூரிய ஆற்றல் (Solar Energy): சுற்றுச்சூழல் பாதிப்பில்லாத மின்சார உற்பத்திக்கான சோலார் செல்களைத் தயாரிக்க வெள்ளி அதிகளவில் பயன்படுத்தப்படுகிறது.
சமீபத்திய ஆய்வுகளின்படி, 2030-ஆம் ஆண்டுக்குள் வெள்ளிக்கான தேவை ஆண்டுக்கு 48,000 முதல் 54,000 டன்கள் வரை இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. ஆனால், அதன் உற்பத்தியோ வெறும் 34,000 டன்களாக மட்டுமே இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தத் தட்டுப்பாடு காரணமாக வெள்ளியின் விலை எதிர்காலத்தில் இன்னும் அதிகரிக்க வாய்ப்புள்ளது.
"தேவை இன்னும் குறையவில்லை," என்று கூறும் பொருளாதார வல்லுநர்கள் , தற்போதைய ஏற்ற இறக்கங்கள் வழக்கமான ஒன்றுதான் என்றும், வெள்ளியின் எதிர்காலம் பிரகாசமாக இருப்பதாகவும் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications