Zoho Sridhar Vembu: தங்கம் என்பது முதலீடு அல்ல! எனக்கு கிரிப்டோ வேண்டாம்! ஸ்ரீதர் வேம்பு கருத்து
சென்னை: தங்கம் வாங்குவது முதலீடு அல்ல, அது ஒரு காப்பீடு என ஜோஹோ நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு தெரிவித்துள்ளார். கிரிப்டோவை விட தங்கத்தை மிகவும் நம்பகமான மற்றும் காலத்தால் நிரூபிக்கப்பட்ட சொத்தாகத் தான் நம்புவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின் டாலர் மதிப்பு நிலையற்ற தன்மை, உலகில் நிலவி வரும் ரஷ்யா உக்ரைன் போர், இஸ்ரேல் - காசா போர். டாலருக்கு பதில் தங்கத்தின் மீது முதலீடு செய்ய பல்வேறு உலக நாடுகள் தங்கத்தை வாங்கி குவித்து வைப்பது போன்றவைகளால் தங்கம் விலை உயர்ந்து கொண்டே செல்கிறது.

அதாவது ஒரு பொருளுக்கு டிமான்ட் அதிகரித்தால் அதன் விலை உயரும் என்பதுதான் சிம்பிள் லாஜிக். இந்த காரணத்தாலும் தங்கம் விலை உயர்கிறது. தீபாவளி பண்டிகையின் போது தங்கம் ஒரு சவரன் ரூ 1 லட்சமாகும் என பொருளாதார நிபுணர்கள் கணித்தனர்.
இவர்கள் கணித்த போது தங்கத்தின் விலை சவரன் ரூ 70 ஆயிரம்களில் இருந்தது. இதனால் எங்கிருந்து தீபாவளிக்கு 30 ஆயிரம் ரூபாய் உயரும் என கேள்வி எழுந்த நிலையில் தினமும் இரு வேளை தங்கம் விலை உயர்ந்து கொண்டே வந்ததன் விளைவு இன்று அக்டோபர் 19ஆம் தேதி நிலவரப்படி தங்கம் விலை சவரனுக்கு ரூ 96 ஆயிரத்திற்கு விற்பனையாகிறது.
நாளை மார்க்கெட் திறந்ததும் எவ்வளவு விலை உயர போகிறதோ என்ற கவலை இப்போதே தொற்றிக் கொண்டுவிட்டது. இந்த நிலையில் தங்கம் குறித்து ஜோஹோ நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு கூறியிருப்பதாவது: நாணய மதிப்பிழப்புக்கு (Currency Debasement) எதிராக தங்கம் ஒரு காப்பீடு என்பது எனது கருத்து ஆகும்.
கடந்த 25 ஆண்டுகளாக இதையே என் கருத்தாக வைத்துள்ளேன். பெட்ரோலியம் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை போல் தங்கத்தின் மீதான வாங்கும் சக்தியை நீண்ட காலமாக தக்க வைத்துக் கொண்டுள்ளது. அமெரிக்க பங்கு சந்தையில் வேகமாக ஏறும் மதிப்புகளால் திடீரென முழுவதுமாக சரிய வாய்ப்பு இருக்கிறது.
2008 ஆம் ஆண்டை போல் மீண்டும் நிதி நெருக்கடி ஏற்பட வாய்ப்புள்ளது. நிதி அபாயத்தில் இருந்து காக்கும் காப்பீடு தங்கம். இது ஒரு முதலீடு அல்ல. எனக்கு கிரிப்டோ கரன்சியில் நம்பிக்கை இல்லை.
அரசாங்க பத்திரங்கள் அல்லது கருவூல பில்கள் போன்ற நீண்ட கால முதலீடுகளை விட தங்கம் மீதான முதலீடு சிறப்பானது என்றும் அவர் கூறியுள்ளார். பல தொழில்நுட்பத் தலைவர்கள் கிரிப்டோவை வாங்குங்கள் என கூறினாலும் ஸ்ரீதர் வேம்பு அந்த கிரிப்டோ தனக்கு தேவையில்லை என தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் தங்கம் என்பது பணம், இது ஏழை இந்தியர்களுக்கு நன்கு தெரியும். அந்த அறிவுதான் திறமை. உலக பொருளாதார நிலை மிகவும் மோசமாக உள்ள நிலையிலும் இந்தியாவின் ஸ்திரத்தன்மை தங்கத்தில் இருந்து வரும். இவ்வாறும் ஸ்ரீதர் வேம்பு தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications