பாகற்காயை முகம் சுளிக்காமல் சாப்பிட வேண்டுமா? மிராக்கிள் ஃப்ரூட் இருக்கே! அதென்ன அதிசய பழம்?
சென்னை: மிராக்கிள் ப்ரூட் என்பதை தமிழில் அதிசய பழம் என்கிறார்கள். இந்த பழத்தை சாப்பிட்ட அரை மணி நேரத்திற்கு எதை சாப்பிட்டாலும் இனிப்பாகவே தெரியும். அதாவது கசப்பான பாகற்காயை சாப்பிட்டாலும் அது வெள்ளரிக்காய் போல் தெரியும்.
இந்த மிராக்கிள் பழத்தை சாப்பிட்டுவிட்டு ஒரு எலுமிச்சம் பழத்தைக் கூட சாப்பிடலாம். புளிப்பே இருக்காது. தேன் போல் இருக்கும். இந்த பழத்தின் பிறப்பிடம் மேற்கு ஆப்பிரிக்கா. வெயில் அதிகம் உள்ள நாடுகளில் இது வளர்கிறது.

புளிப்புச் சுவையை கொண்ட மதுவை இனிப்பாக்குவதற்கு ஆப்பிரிக்க மக்கள் இந்த பழத்தை பயன்படுத்துகிறார்கள். இந்த பழம் சிவப்பு நிறத்தில் காட்சியளிக்கும். 8 அடி உயர செடியில் கொத்துக் கொத்தாக காய்த்து வருகிறது. சர்க்கரை நோய் மற்றும் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்கள் உணவாகச் சாப்பிட பயன்படுகிறது.
இந்த பழம் சர்வதேச சந்தைக்கு வந்தால் கிராக்கி உண்டு. இந்த பழத்தில் வைட்டமின் சி, வைட்டமின் கே உள்ளிட்டவை உள்ளன. உடல் பருமனைக் குறைக்கும், நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கிறது. இதில் இனிப்பு சுவை இருந்தாலும் சர்க்கரை இல்லை. இந்த பழம் 18ஆம் நூற்றாண்டில் கண்டுபிடிக்கப்பட்டது.
இந்த பழத்தில் மிராக்குலின் எனும் புரதம் இருக்கிறது. இந்த பழத்தை சாப்பிட்டதும் எதை சாப்பிட்டாலும் இனிப்பு தன்மையாக மூளையை உணர வைக்கிறது. இதனால்தான் இந்த பழத்துக்கு மிராக்கிள் எனும் பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்த செடியை வீட்டில் வளர்க்கலாம். ஆன்லைனிலும் இந்த செடிகள் கிடைக்கின்றன.
இந்த பழத்தை சர்க்கரைக்கு பதிலாக சில உணவு வகைகளிலும் கலந்து பயன்படுத்தலாம். கீமோதெரபி நோயாளிகள் அனுபவிக்கும் சுவை மாற்றங்களுக்கு சிகிச்சையாக இந்த பழம் சொல்லப்படுகிறது. இந்த பழத்தின் தூள் பல்வேறு இடங்களில் கிடைக்கிறது.
இதை மிராக்கிள் பெர்ரி என்றும் அழைக்கிறார்கள். இது ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவையும் குறைக்கிறது. இந்த பழம், இலை, கொட்டையில் இருந்து எடுக்கப்படும் எண்ணெய் ஆகியவை மருந்தாக பயன்படுத்தப்படுகிறது.
இதை பயன்படுத்துவது குறித்து விஞ்ஞான பூர்வமாக எந்த தகவல்களும் இல்லை. இதில் இருக்கும் ஒரு கெமிக்கல் நாக்கில் உள்ள சுவை மொட்டுகளை பாதிப்பதால் அரை மணி நேரத்திற்கு இனிப்பு சுவை மட்டுமே தெரிகிறது.












Click it and Unblock the Notifications