நெருங்கும் பாஜக, திமுக! மக்களுக்கு சேவை செய்யலாம்.. கணக்கு போடும் கழக தோழர்கள்!
சென்னை: தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு, இந்தியா கூட்டணியிலிருந்து திமுக விலகி நிற்கும் நிலையில், ஒரே நாடு, ஒரே தேர்தல் உள்ளிட்ட மசோதாக்களை நிறைவேற்ற திமுகவின் ஆதரவை கேட்க பாஜக திட்டமிட்டு வருகிறது. அதே நேரம், பாஜகவுடன் கை கோர்ப்பதன் மூலம் அதிகாரத்தில் பங்கெடுத்து.. மக்களுக்கு சேவை செய்யலாம் என்றும் உடன் பிறப்புகள் தலைமையிடம் யோசனை கூறி வருகின்றனர். எனவே விரைவில் பாஜக-திமுக கூட்டணி சாத்தியமாகலாம் என்று சொல்லப்படுகிறது.
தமிழக சட்டமன்ற தேர்தல், யாரும் எதிர்பாராத மாற்றத்தை உருவாக்கியிருக்கிறது. குறிப்பாக திமுக தனித்து விடப்பட்டிருக்கிறது. அக்கட்சியுடன் கூட்டணியில் இருந்த கட்சிகள் தற்போது, தவெக பக்கம் தாவியிருக்கின்றன.

என்ன நடக்கிறது?
ராகுல் காந்திதான் பிரதமர் வேட்பாளர் என்று முதல் முதலில் அறிவித்த திமுகவை, காங்கிரஸ் கழற்றிவிட்டிருந்தது எல்லாம்.. சட்டமன்ற தேர்தல் முடிவுகளுக்கு பின்னர்தான். காங்கிரஸ் போன வேகத்தில் கம்யூனிஸ்டுகள், விடுதலை சிறுத்தைகள், ஐயுஎம்எல் உள்ளிட்ட கட்சிகளும் விஜய் பக்கம் சாய்ந்துவிட்டன. எனவே, காங்கிரஸ் மீது கடும் கோபத்தில் இருந்த திமுக, சமீபத்தில் டெல்லியில் நடந்த 'இந்தியா' கூட்டணி கூட்டத்தில் பங்கேற்காமல் தவிர்த்தது. தவிர்த்தது மட்டுமல்லாது, காங்கிரஸுக்கு எதிராக.. டெல்லியில் இந்தியா கூட்டணி கூட்டம் நடைபெறும் பகுதியில் பேனர்களை வைத்து கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தது.
பாஜக கூட்டணி
அப்படியெனில் பாஜகவுக்கு ஆதரவளிக்கப்போகிறதா? என்கிற கேள்வி எழுந்தது. இந்த கேள்விக்கு நேரடியாக ஆம் என்று திமுக பதிலளிக்கவில்லை. இருப்பினும், திமுக முன்னாள் அமைச்சர்களின் பேச்சு, திமுக-பாஜக கூட்டணியை உறுதி செய்வதைப்போலதான் இருக்கிறது என்று அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.
அனிதா ராதாகிருஷ்ணன், "நம்முடைய நாடாளுமன்ற உறுப்பினர் திருச்சி சிவா போன்றவர்கள் டெல்லியில் அமைச்சர்களாக அமர்வார்கள். திமுக எம்பிக்கள் டெல்லியில் அமைச்சர்களாக பொறுப்பேற்கும் நிலை வரும்" என்று கூறியிருந்தார்.
பாஜகவின் மூவ்
அனிதா ராதாகிருஷ்ணன் இப்படி பேசுவதற்கு பின்னால் ஒரு கணக்கு இருக்கிறது. அதாவது, ஏற்கெனவே இந்தியா கூட்டணி கூட்டத்தில் திமுக ஆர்வம் காட்டவில்லை. இந்த சான்ஸை பயன்படுத்தி தொகுதி மறுவரையறை மசோதா, ஒரே நாடு, ஒரே தேர்தல் மசோதாக்களை நிறைவேற்ற திமுகவின் ஆதரவை பாஜக கேட்க தொடங்கியிருக்கிறது. ஆதரவு கொடுத்தால்.. கை மாறாக மத்திய அமைச்சரவையில் இடமும் கிடைக்கும்.
தொகுதி மறுவரையறை
எனவே தொகுதி மறுவரையறை குறித்த உடன்பிறப்புகள் பேச தொடங்கியிருக்கின்றனர். அதாவது தொகுதி மறுவரையறை வந்தால், தமிழகத்தின் எம்பிக்களின் (லோக்சபா) எண்ணிக்கை 59 ஆகவும், ராஜ்யசபா எம்பிக்களின் எண்ணிக்கை 27ஆகவும், எம்எல்ஏக்களின் எண்ணிக்கை 351ஆகவும் உயரும். இதை வைத்து மக்களுக்கு ஏராளமான சேவைகளை செய்ய முடியும் என்று என பேச தொடங்கியிருக்கின்றன. அப்படியெனில், விரைவில் திமுக-பாஜக கூட்டணி சாத்தியமானாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை என்று அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.
யாருக்கு லாபம்?
இருப்பினும், அப்படி நடந்தால் திமுகவுக்குதான் பின்னடைவு ஏற்படும் என்றும் அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர். ஏனெனில், பாஜக எதிர்ப்புதான் திமுகவின் மையப்புள்ளி. அதிலிருந்து கட்சி நழுவுகிறது எனில், திமுகவின் இடத்தை தவெக நிரந்தரமாக கைப்பற்றும் என்றும் எச்சரிக்கின்றனர். ஒருவேளே திமுக-பாஜக கூட்டணி சாத்தியமானால்? அது யாருக்கு லாபமாக இருக்கும்? நீங்கள் இதை எப்படி பார்க்கிறீர்கள் என்பதை கமென்ட்டில் சொல்லுங்கள்.















Click it and Unblock the Notifications