அவதூறுக்கு பதில்.. கலவரத்தை தூண்டுவதாக வழக்கு போடுவதா? தவெக அரசுக்கு உயர்நீதிமன்றம் கேள்வி!
பழனி கோயில் விவகாரத்தில் அமைச்சரை தொடர்புபடுத்தி சோஷியல் மீடியாவில் வினோத் சூர்யா பதிவிட்டிருந்தார் என்பதுதான் குற்றச்சாட்டு. இப்படி இருக்கையில் அவர் மீது பொது அமைதியை குலைப்பது உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டிருக்கிறது.
இதைத்தான் சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியிருக்கிறது. சமூக வலைதள பதிவுக்காக குற்ற வழக்கை பதிவு செய்வதை தவிர்க்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் கூறியிருக்கிறது.

என்ன நடந்தது?
திண்டுக்கல் பழனி அருள்மிகு தண்டாயுதபாணி திருக்கோயிலுக்கு கடந்த 1888ம் ஆண்டு 1.40 ஏக்கர் நிலம் ஒன்று தானமாக வழங்கப்பட்டது. இந்த நிலத்தை லாப நோக்கத்திற்காக விற்க கூடாது என்று தான பத்திரத்தில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. ஆனால், கோயில் அறக்கட்டளையை சேர்ந்தவர் என்று கூறி, முருகதாஸ் சுவாமிகள் என்பவர், 2 தனி நபருக்கு ரூ.30 கோடி மதிப்பு கொண்ட இந்த 1.40 ஏக்கர் நிலத்தை, வெறும் ரூ.2 கோடிக்கு விற்றிருக்கிறார். அதுவும் இந்த பத்திர மாற்றம் நடந்த விதமே பெரிய சந்தேகங்களை கிளப்பியது.
பத்திரத்தை மாற்றம் செய்த நாளன்று, பழனி பதிவாளர் விடுப்பில் இருந்திருக்கிறார். அவருக்கு பதில் அன்று ஒரு நாள் மட்டும் பொறுப்பு பதிவாளராக வந்த கொடைக்கானல் பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன் என்பவர் மூலம் நிலம் கை மாற்றப்பட்டிருக்கிறது. இதையடுத்து கோயில் அறக்கட்டளை சார்பில் நீதிமன்றத்தை நாட.. நீதிமன்றம் கடுமையான கண்டனங்களை பதிவு துறைக்கு தெரிவித்திருந்தது.
இது ஒருபுறம் இருக்க.. மறுபுறம் இந்த நிலத்தை வாங்கியவர், பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் லோகேஷ் தமிழ் செல்வனுக்கு சொந்தமானவர் என்று சோஷயல் மீடீயாக்களில் போலியான செய்திகள் பரவின. இப்படி தவறான தகவல்களை பரப்புவோர் மீது உரிய நடவடிக்கை எடுக்க கோரி அமைச்சர் போலீசில் புகார் அளித்தார். இந்த புகாரில் அடிப்படையில்தான் வினோத் சூர்யா என்பவர் கைது செய்யப்பட்டிருந்தார்.
அவதூறு பரப்பினால் என்றால்.. அதற்கான பிரிவில்தான் வழக்குப்பதிவு செய்ய வேண்டுமே தவிர.. பொது அமைதிக்கு பாதிப்பு ஏற்படுத்தினார் என்கிற பிரிவில் வழக்குப்பதிவு செய்து போலீசார் சொதப்பியிருந்தனர். இதைத்தான் நீதிமன்றம் தற்போது கேள்வி எழுப்பியிருந்தது.












Click it and Unblock the Notifications