RRB jobs: ரயில்வேயில் அப்ரண்டீஸ் வேலை.. 1,785 பணியிடங்கள்.. 12 ஆம் வகுப்பு தகுதி தான்.. செம சான்ஸ்
சென்னை: தென் கிழக்கு ரயில்வேயில் காலியாக உள்ள அப்ரெண்டீஸ் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. ஆர்.ஆர்.பி வெளியிட்டுள்ள அறிவிப்பில், மொத்தம் 1,785 பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. 12 ஆம் வகுப்பு முடித்தவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க முடியும். இதற்கு எப்படி விண்ணப்பிப்பது போன்ற விவரங்களை இங்கு பார்க்கலாம்.
நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை நிறுவனமான ரயில்வேயில் லட்சக்கணக்கான ஊழியர்கள் பணி செய்து வருகிறார்கள். மத்திய அரசு ஊதிய விதிமுறைகளின் படி ரயில்வே ஊழியர்களுக்கு கை நிறைய சம்பளம், சலுகைகள் உள்ளிட்டவை வழங்கப்படுகின்றன.

இதனால், ரயில்வே பணியில் சேர வேண்டும் என்பது நாடு முழுவதும் உள்ள பல லட்சக்கணக்கான தேர்வர்களின் கனவாக உள்ளது. ரயில்வேயில் உள்ள காலிப்பணியிடங்களை ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம் எனப்படும் ஆர்.ஆர்.பி அவ்வப்போது உரிய அறிவிப்புகளை வெளியிட்டு நிரப்பி வருகிறது. அதன்படி தற்போது 1,785 அப்ரெண்டீஸ் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இது பற்றிய விவரங்களை பார்க்கலாம்.
பணியிடங்கள் விவரம்:
மொத்தம் 1785 அப்ரெண்டீஸ் பணியிடங்கள் நிரப்பப்படுகிறது.
வயது வரம்பு:
ஜனவரி 1, 2026 நிலவரப்படி, விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் 15 வயது நிரம்பியவராகவும், 24 வயதுக்கு உட்பட்டவராகவும் இருத்தல் வேண்டும். வயது வரம்பு அரசு விதிகளை பின்பற்றி தளர்வு அளிக்கப்படும். SC/ST பிரிவினருக்கு 5 ஆண்டுகள், OBC பிரிவினருக்கு 3 ஆண்டுகள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு 10 ஆண்டுகள் வயது வரம்பு தளர்வு அளிக்கப்படும். முன்னாள் ராணுவ வீரர்களுக்கும் 10 ஆண்டுகள் வயது தளர்வு உண்டு.
கல்வித் தகுதி
அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையத்தில் இருந்து 10 மற்றும் 12 ஆம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்க முடியும். குறைந்தபட்சம் 50% மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தேசிய தொழிற்பயிற்சி கவுன்சில் (NCVT) அல்லது மாநில தொழிற்பயிற்சி கவுன்சில் (SCVT) வழங்கிய ITI தேர்ச்சி சான்றிதழும் கட்டாயம்.
விண்ணப்பக் கட்டணம்
விண்ணப்ப கட்டணத்தை பொறுத்தவரை பொதுப் பிரிவினருக்கு ரூ. 100 கட்டணம் ஆகும். பெண்கள் மற்றும் பிற பிரிவினருக்கு விண்ணப்பக் கட்டணம் கிடையாது.
தேர்வு முறை
தேர்வு முறையை பொறுத்தவரை 12 ஆம் வகுப்பில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். பிறகு சான்றிதழ் சரிபார்ப்புக்கு பின்னர் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். விண்ணப்பங்கள் சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி டிசம்பர் 17, 2025 ஆகும்.
எப்படி விண்ணபிப்பது?
ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்க வேண்டும். ரயில்வேயின் அதிகாரப்பூர்வ இணையதளமான rrcser.co.in இல் சென்று விண்ணப்பிக்க வேண்டும். தேர்வு அறிவிப்பினை ஒருமுறை படித்து தகுதியும் ஆர்வமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்க அறிவுறுத்தப்படுகிறார்கள். ஒரு ஆண்டு ஒப்பந்த அடிப்படையிலான பணியிடங்கள் ஆகும்.
தேர்வு அறிவிப்பினை படிக்க: https://www.rrcser.co.in/pdf/Notification%20for%20Act%20Apprentices%202025-26.pdf












Click it and Unblock the Notifications