மும்பை ஏர் இந்தியா ஏர்போர்ட் சர்வீஸ் நிறுவனத்தில் வேலைக்கு இண்டர்வியூ.. குவிந்த பல ஆயிரம் பேர்
மும்பை: மும்பையில் உள்ள ஏர் இந்தியா ஏர்போர்ட் சர்வீஸ் நிறுவனம் வேலைக்கு ஆட்கள் தேவை என்று அறிவித்திருந்தது. இங்கு வெறும் 2200 இடங்களுக்கு, பல ஆயிரம் இளைஞர்கள் குவிந்தனர். எப்படியாவது வேலை கிடைத்துவிடாத என்ற ஏக்கத்தில், இளைஞர்கள் முட்டிமோதிய வீடியோ வேகமாக பரவி வருகிறது.
வேலைவாய்ப்பின்மை என்பது நாட்டில் மிகப்பெரிய அளவில் அதிகரித்துள்ளது. நேரடியாக வேலைக்கு ஆட்கள் தேவை என்று அறிவிப்பு வெளியாகும் நிறுவனங்கள் முன்பு ஏராளமான இளைஞர்கள் குவிந்து நிற்பது வழக்கமான நிகழ்வுகளாக மாறி வருகிறது. வெறும் 1000 பேர் தேவை என்ற இடத்திற்கு கூட 50000 பேர் வந்து குவியும் நிலை ஏற்படுகிறது.

அண்மையில் குஜராத்தின் பாரூச்சில் உள்ள லார்ட்ஸ் பிளாசா ஹோட்டலில் வெறும் 10 காலி பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியானது. ஆனால் வேலைக்கு சேர அப்ளிகேசனுடன் ஆயிரக்கணக்கானோர் குவிந்தனர். வேலைக்கு விண்ணப்பங்களுடன் குவிந்தவர்களை கட்டுப்படுத்த முடியாமல் திணறிய ஓட்டல் நிர்வாகம், கடைசியில் போலீஸை வரவழைத்தது. சிலருக்கு தள்ளுமுள்ளு காரணமாக காயமும் ஏற்பட்டது. இந்த வீடியோ அண்மையில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. பாஜக பல வருடங்களாக ஆளும் குஜராத்தில் இதுதான் நிலவரமா என்று எதிர்க்கட்சிகள் சரமாரியாக விமர்சிக்கும் அளவிற்கு நிலைமை இருந்தது.
இந்நிலையில் இந்தியாவின் வர்த்தக தலைநகரான மும்பையில் பல ஆயிரம் நிறுவனங்கள் உள்ளன. மிகப்பெரிய அளவில் ஐடி நிறுவனங்கள் இருக்கின்றன. லட்சக்கணக்கான தொழிற்சாலைகள் உள்ளன. இந்தியாவில் மற்ற எந்த நகரத்திலும் மும்பையில் உள்ளது போன்ற வசதிகள் இல்லை. இந்தியாவின் நிர்வாக தலைநகரம் டெல்லி என்ற போதிலும், இந்தியாவின் இதயம் என்று சொன்னால் அது மும்பை தான்.. மும்பையை மையமாக வைத்துதான் இந்தியாவின் பெரும்பாலான தொழில் நிறுவனங்கள் இயங்கி வருகின்றன.
மும்பையில் இவ்வளவு நிறுவனங்கள் உள்ள போதிலும் வேலைக்காக மக்கள் அல்லாடுவது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. வெறும் 2200 வேலைக்காக 25000 இளைஞர்கள் குவிந்து, சாலையை ஸ்தம்பிக்க வைத்துள்ளனர். மும்பை ஏர் இந்தியா ஏர்போர்ட் சர்வீசஸ் லிமிடெட் நிறுவனத்தில் 2,216 காலியிடங்களுக்கு வாக்-இன் இண்டர்வியூ அறிவித்திருந்தது.
இதற்கான நேர்காணலில் கலந்து கொள்ள விரும்புவர்கள் நேரடியாக மும்பை கலினா பகுதியில் உள்ள ஏர் இந்தியா ஏர்போர்ட் சர்வீசஸ் லிமிடெட் அலுவலகத்துக்கு வருமாறு கூறப்பட்டிருந்தது. இந்த அறிவிப்பினை பார்த்து நேற்று (ஜூலை 16) காலையிலேயே மும்பையில் ஏர் இந்தியா ஏர்போர்ட் சர்வீசஸ் அலுவலகம் அமைந்துள்ள கலினாவிற்கு ஆயிரக்கணக்கான இளைஞர்கள் வரத் தொடங்கினர்.
சுமார் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் அப்பகுதியில் கூடியிருந்தனர். கூட்ட நெரிசலை சமாளிக்க விமான ஊழியர்கள் திணறினர். சமூக ஊடகங்களில் இந்த கூட்டத்தின் வீடியோக்கள் வெளியாகியுள்ளன. அந்த வீடியோக்கள் வேலை தேடும் இளைஞர்கள் எப்படியாவது, நேர்காணல் நடைபெறும் கவுன்டர்களை அடைய வேண்டும் என்று ஒருவருக்கொருவர் முட்டி மோதியை வெளிப்படுத்தியது.
அங்கு வேலை தேடி வந்த இளைஞர்கள் உணவு மற்றும் தண்ணீர் இல்லாமல் பல மணி நேரம் காத்திருக்க வேண்டிய நிலை இருந்தது. இதன் காரணமாக பலர் உடல்நிலை சரியில்லாமல் சோர்ந்து போனார்கள். ஒரு கட்டத்தில் பொறுமை இழந்த இளைஞர்கள் சுவர்கள், வாகனங்கள், மரங்கள் ஆகியவற்றின் மீது ஏறி அலுவலகத்துக்குள் நுழைய முயன்றார்கள். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
பெரும் விபத்து ஏற்பட்டு அசம்பாவிதம் ஏற்படுமோ என்று அச்சம் அடைந்த விமான நிறுவன அலுவலக ஊழியர்கள் இளைஞர்களிடம் தங்களின் ரெசியூம்களை ஒப்படைத்து விட்டுச் செல்லுமாறு கூறினார்கள். மேலும் அந்த ரெசியூம்களில் இருந்து, தகுதியுள்ள நபர்கள் மீண்டும் அழைக்கப்படுவார்கள் என்று ஊழியர்கள் உறுதியளித்தனர். இதையடுத்தே பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.
More than 1,00,000 unemployed youths have gathered for 600 Air India jobs in Mumbai.
— Shantanu (@shaandelhite) July 17, 2024
And, BJP says that unemployment issue raised by Rahul Gandhi Ji is fake. pic.twitter.com/uyYm3j8RRc
இதில் சில வேலைக்கு 22000 சம்பளம் தருவதாக விமானம் நிறுவனம் கூறியிருந்துள்ளது. எப்படியாவது இந்த வேலைக்கு சேர வேண்டும் என்ற முனைப்பில் மும்பையில் இருந்து மட்டுமின்றி, மகாராஷ்டிராவின் பல்வேறு பகுதிகளிலும் இருந்தும் இளைஞர்கள் வந்துள்ளார்கள். அண்டை மாநிலமான ராஜஸ்தானில் இருந்தும் வந்துள்ளனர்.












Click it and Unblock the Notifications