தமிழகத்தில் இன்று
மாநகராட்சி இடைத்தேர்தலில் வன்முறை என்கிறார் ஜெ.
சென்னை:
சென்னையில் நடந்த மாநகராட்சி வார்டு இடைத் தேர்தலில் அ.தி.மு.க தொண்டர்கள் மீது வன்முறை கட்டவிழ்த்துவிடப்பட்டதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் ஜெயலலிதா குற்றம்சாட்டியுள்ளார்.
இதுகுறித்து அ.தி.மு.க பொதுச்செயலாளர் ஜெயலலிதா வெளியிட்ட அறிக்கை:
இடைத்தேர்தல் நடத்துவதாகக் கூறி, ஆளும் கட்சிப் பெரும்புள்ளிகள் அராஜகத்தைக் கட்டவிழ்த்து விடுவதும்,அதைக் காவல்துறையினர் வேடிக்கை பார்ப்பதும் தமிழ்நாட்டில்தான் வாடிக்கையாக நடந்து வருகிறது.
கத்திகளோடும், பயங்கர ஆயுதங்களோடும் ஓட்டுச் சாவடிக்கு வருகிற தி.மு.கவினரைக் காவல்துறை கைகட்டிவரவேற்றது. ஆனால் அதே காவல்துறை ஜனநாயக முறையில் ஓட்டளிக்கச் சென்ற பொதுமக்களையும், அ.தி.மு.கதொண்டர்களையும் கண்மூடித்தனமாய்த் தாக்கியுள்ளது.
அ.தி.மு.க மூத்த தலைவரும், மகளிர் அணிச் செயலாளருமான ஈ.வெ.கி சுலோசனா சம்பத்தை, சட்டசபை துணைசபாநாயகர் பரிதி இளம்வழுதி தூண்டுதலின் பேரில் அவர் முன்னிலையிலேயே தி.மு.க பிரமுகர் சண்முகம்அநாகரிகமாகப் பேசித் தாக்கியுள்ளது மிகுந்த வேதனையளிக்கிறது.
மக்கள் சக்தியை வன்முறையால் வெல்லப்பார்க்கும் தி.மு.கவினரின் கொடுமைக்கு சாவு மணி அடிக்கும் காலம்நெருங்கி விட்டது என்று அறிக்கை வெளியிட்டுள்ளார் ஜெயலலிதா.