நாற்காலி ஆசை எங்களுக்கு இல்லை என்கிறார் மூப்பனார்
மதுரை:
நாற்காலியைப் பிடிப்பதற்காக சிறை நிரப்பும் போராட்டத்தை தமிழ் மாநில காங்கிரஸ் நடத்தவில்லை என அக்கட்சியின் தலைவர் மூப்பனார் கூறியுள்ளார்.
த.மா.கா சார்பில் வரும் 27-ம் தேதி மாநிலம் முழுவதிலும், சிறை நிரப்பும் போராட்டம் நடக்கவுள்ளது. இதுகுறித்து, ஒட்டன்சத்திரத்தில் நடந்தபொதுக்கூட்டத்தில் மூப்பனார் பேசினார்.
மூப்பனார் பேசுகையில், தமிழ் மாநில காங்கிரஸ் தொண்டர்கள் நெல்லிக்காய் போன்றவர்கள். மூட்டையுடன் கொண்டு சென்றால்தான் ஒழுங்காக கொண்டுபோய் சேர்க்க முடியும். இல்லாவிட்டால், மூட்டை அவிழ்ந்து விட்டால் சிதறிப் போய்விடுவார்கள்.
எனவே த.மா.கா தொண்டர்கள் ஒன்று பட்டு இம்மாதம் 27-ம் தேதி நடைபெறும் மக்கள் பிரச்சனைக்காக, மக்களின் நன்மைக்காகநடத்தப்படுகின்ற போராட்டத்தில் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும்.
மறியல் போராட்டம் நடத்துவது தி.மு.க அரசிடமோ கருணாநிதியிடமோ சண்டை போடுவதற்காக அல்ல. மக்களின் எண்ணங்களை அரசுக்கு தெரிவிக்கவேண்டும் என்பதற்காகத்தான் இந்த போராட்டம்.
ஜெயிலில் போய் நாம் உட்கார்ந்து கொள்ள வேண்டும் என்பதற்காக இந்தப் போராட்டம் நடத்தப்படவில்லை. மக்களின் கருத்துக்களை அரசுக்குஎடுத்துச் சொல்லவே இந்தப்போராட்டத்தை நடத்துகிறோம்.
நாங்கள் ஒன்றும் நாற்காலி ஆசைக்காக, பதவி ஆசைக்காக இந்தப் போராட்டத்தை நடத்தவில்லை. எனக்கு எழுபது வயதாகிறது நான் பார்க்காதபதவியில்லை. எனவே பதவிக்காக இந்தப் போராட்டத்தை நடத்தவில்லை என்றார் அவர்.