புழுத்த அரிசி புகார்: 29 பேர் சஸ்பெண்ட்
சென்னை:
முந்தைய திமுக ஆட்சியில் புழுத்த அரிசியைக் கொள்முதல் செய்து வைத்திருந்ததாகக் கூறப்பட்ட புகாரின் எதிரொலியாக, 29அலுவலர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.
இவர்கள் அனைவரும் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தைச் சேர்ந்தவர்கள். சஸ்பெண்ட் செய்யப்பட்ட இந்தஅலுவலர்களுக்கு பாதிச் சம்பளம்தான் கிடைக்கும்.
இவர்கள் மீதான குற்றச்சாட்டு குறித்து விசாரிக்க விசாரணை அதிகாரி ஒருவர் நியமிக்கப்படுவார். இவர்கள் மீது, இலாகாப்பூர்வமான நடவடிக்கையும் மேற்கொள்ளப்படும் என்று அரசு வட்டாரங்கள் கூறின.
இத்துறையில் மொத்தம் 12 ஆயிரம் பேர் வேலை செய்கின்றனர்.
அதிமுக ஆட்சிக்கு வந்தவுடனேயே, பேரவையில் முதல்வர் ஜெயலலிதா பேசும்போது, ரூ.65 கோடி மதிப்புள்ள புழுத்த அரிசியைதிமுக அரசு கையிருப்பில் விட்டுச் சென்றுள்ளது என்று புகார் கூறினார்.
இதையடுத்து, தமிழ்நாடு முழுவதும் உள்ள கிட்டங்கிகளில் அதிகாரிகள் ஆய்வு செய்தனர். கூட்டுறவுத்துறை அமைச்சர் தனபால்கூட, திருச்சியில் முகாமிட்டு, இதுகுறித்த விசாரணையை நேரில் நடத்தினார்.
கடந்த வாரம், பத்திரிகையாளர்களைக் கூட்டி, புழுத்த அரிசியின் மாதிரியையும் காண்பித்து, திமுக அரசின் மீது விசாரணைக்கமிஷன் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார் ஜெயலலிதா. இது தொடர்பாக வழக்கு ஒன்று தொடரப்படும் என்றும் அவர்கூறியிருந்தார்.
இந்நிலையில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தைச் சேர்ந்த அலுவலர்கள் 29 பேர் தற்போது சஸ்பெண்ட்செய்யப்பட்டுள்ளனர்.
தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத் தொழிலாளர்கள் முன்னேற்றச் சங்கம் இதைக் கடுமையாகக் கண்டித்துள்ளது. அரசியல்உள்நோக்கோடு 29 அலுவலர்களை அதிமுக அரசு பழிவாங்கியுள்ளது; இதை எதிர்த்து, விரைவில் போராட்டம் நடத்தப்படும்என்று அச்சங்கத்தின் தலைவர் செ. குப்புசாமி கூறியுள்ளார்.