திமுக வழக்கு மீண்டும் தள்ளுபடி: ஆண்டிப்பட்டி தேர்தல் நிச்சயம் நடக்கும்
டெல்லி:
ஆண்டிபட்டியில் தேர்தலை தள்ளி வைக்கக் கோரி திமுக தாக்கல் செய்த மனு இன்று (புதன்கிழமை) தள்ளுபடி செய்யப்பட்டது.
இதையடுத்து நாளை திட்டமிட்டபடி தேர்தல் நிச்சயம் நடக்கும்.
ஆண்டிப்பட்டியில் 17,000 போலி வாக்காளர்களை அதிமுகவினரும் தமிழக அரசும் சேர்த்துள்ளதாகக் கூறி இந்தத்தேர்தலை நிறுத்த திமுக வேட்பாளர் வைகை சேகர் டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார்.
இந்த மனு மீதான விசாரணை கடந்த வாரம் முடிவடைந்தது. தீர்ப்பு இன்று வெளியிடப்பட்டது. தேர்தலுக்கு ஒருநாள் தான் இருந்த நிலையில் இந்த தீர்ப்பு மிக பரபரப்பாக தமிழகம் முழுவதும் எதிர்பார்க்கப்பட்டது.
இந் நிலையில் நீதிபதி மன்மோகன் சரீன் இந்த வழக்கு மீது இன்று தீர்ப்பளித்தார். அவரது தீர்ப்பு விவரம்:
வைகை சேகர் கூறிய புகார்களை தேர்தல் கமிஷன் ஆராய்ந்துள்ளது. இந்தப் புகார்கள் தொடர்பாக நடவடிக்கையும்எடுத்துள்ளது. மேலும் தேர்தல் தேதி ஏற்கனவே அறிவிக்கப்பட்டுவிட்டது. தேதி அறிவிக்கப்பட்ட பின் தேர்தல்விவகாரத்தில் தலையிட உயர் நீதிமன்றத்துக்கு அதிகாரமில்லை.
இந்திய அரசியல் சட்டம் 329 (பி) பிரிவின்படி தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின் அத் தேர்தலை நிறுத்த இந்தநீதிமன்றத்துக்கு அதிகாரம் இல்லை.
மேலும் இந்த வழக்கு தமிழகம் சம்பந்தப்பட்டது. இது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் இதே போன்றஒரு வழக்கு தாக்கல் செய்யப்பட்டு அதை அந்த நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது. அந்தத் தீர்ப்பைஅடிப்படையாக வைத்தே இந்த நீதிமன்றமும் தீர்ப்பளிக்க முடியும்.
அதன்படி திமுகவின் மனுவை இந்த நீதிமன்றம் தள்ளுபடி செய்கிறது.
இவ்வாறு தனது உத்தரவில் சரீன் கூறினார்.
முன்னதாக ஆண்டிப்பட்டி தவிர வாணியம்பாடி, சைதாபேட்டை தொகுதிகளிலும் அதிமுகவினர் உதவியுடன்தமிழக அரசு ஆயிரக்கணக்கான போலி வாக்காளர்களை சேர்த்துள்ளதாக திமுக உள்ளிட்ட கட்சிகள் தேர்தல்கமிஷனிடம் புகார் கொடுத்தன. இதை விசாரித்த தேர்தல் கமிஷன் வாணியம்பாடி, சைதாப்பேட்டை ஆகியதொகுதிகளுக்கான இடைத்தேர்தலை ரத்து செய்தது.
ஆனால், ஆண்டிப்பட்டி தேர்தலை மட்டும் நடத்த முடிவெடுத்தது. இதை எதிர்த்து திமுக பல்வேறுநடவடிக்கைகளில் இறங்கியது. ஆளுநர், ஜனாதிபதியிடம் கூட மனு தந்தது. சென்னை உயர் நீதிமன்றத்திலும்தேர்தலை நிறுத்தக் கோரி ஆர்.எஸ்.பாரதி மூலமாக கருணாநிதி வழக்குத் தொடர்ந்தார்.
ஆனால் திமுகவின் எந்த முயற்சியும் பலனளிக்கவில்லை. இதையடுத்து டெல்லி உயர் நீதிமன்றத்தில் தேர்தல்கமிஷனுக்கு எதிராக வழக்குத் தொடர்ந்தது. இப்போது இந்த வழக்கும் தள்ளுபடி செய்யப்பட்டுவிட்டது.












Click it and Unblock the Notifications