தவெக பேச்சாளர் லயோலா மணிக்கு கவுரவம்! தமிழ்நாடு பாடநூல் கழகத் தலைவரானார்.. லியோனி வகித்த பதவி
சென்னை: தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத் தலைவராக லயோலா மணி நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான நியமன ஆணையை முதல்வர் விஜய் வழங்கியிருந்தார்.
திமுக ஆட்சிக் காலத்தில் பாடநூல் கழகத் தலைவராக திண்டுக்கல் லியோனி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ்நாடு பாடநூல் கழகத் தலைவராக லயோலா மணி நியமிக்கப்பட்டிருந்தார். அதற்கான ஆணையை முதல்வர் விஜய் வழங்க அவர் பெற்றுக் கொண்டார். உடன் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் ராஜ்மோகன் இருந்தார்.

பதவியின் பணிகள் என்ன?
தமிழ்நாடு பாடநூல் கழக தலைவர் பதவி என்பது மாநில கல்வித் துறையில் முக்கியமான பொறுப்பு! அரசுப் பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களின் கல்வித் தேவைகளை நிறைவேற்றுவதே இந்த பதவியின் நோக்கமாகும்.
1 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான பாடப்புத்தகங்களை தயாரிக்கும் பணிகளை வழிநடத்த வேண்டும். மேல்நிலை பள்ளிகளுக்கான தொழிற்கல்விப் புத்தகங்கள் , ஆசிரியர் பட்டயப் பயிற்சிக்கான புத்தகங்கள் அச்சிடப்படுவதை கண்காணிக்க வேண்டும். அரசு பள்ளிகளில் மாணவர்களுக்கு வழங்கப்படும் விலையில்லா கல்வி உபகரணங்களை கொள்முதல் செய்ய வேண்டும்.
அதாவது சீருடைகள், காலணிகள், புத்தகப் பைகள், லேப்டாப், சைக்கிள் உள்ளிட்ட பொருட்கள் மாணவர்களுக்கு தடையின்றி கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும். ஆங்கில பாடப்புத்தகங்களை தமிழில் மொழிபெயர்த்து வெளியிடுவதற்கான திட்டங்களை தயாரிக்க வேண்டும். அது பெரும்பாலும் கல்லூரிகளில் சேரும் தமிழ் வழியில் படித்த மாணவர்களின் நலனுக்கானது.
இந்த பதவிக்கென ஐஏஎஸ் அதிகாரிகள், மேலாண்மை இயக்குநர்களுடன் இணைந்து பணி செய்ய வேண்டும்.
இதுவரை பதவியில் இருந்தவர்கள் யார் யார்
திண்டுக்கல் லியோனி 2021 ஆம் ஆண்டு முதல் 2026 ஆம் ஆண்டு வரை அந்த பதவியை வகித்தார். அதிமுக ஆட்சி காலத்தில பா வளர்மதி இந்த பதவியில் 2017 ஆம் ஆண்டு முதல் 2021 ஆம் ஆண்டு வரை இருந்தார். அவருக்கு முன்பு முதல்வராக ஜெயலலிதா இருந்த போது எம்.எஸ்.எம்.ஆனந்தன், இந்த பதவியில் நியமிக்கப்பட்டிருந்தார்.
தமிழக வெற்றிக் கழகத்தின் பேச்சாளராகவும் கொள்கை பரப்பு இணைச் செயலாளராகவும் இருக்கிறார் லயோலா மணி. இவர் டிவி விவாத நிகழ்ச்சிகளில் கூட பங்கேற்று பேசி வருகிறார்.
அது போல் பொது மேடையிலும் பேச்சாளராக இருந்து வருகிறார். எதிர்க்கட்சியினரின் விமர்சனத்திற்கு தக்க பதிலடியை நாகரீகமாக கொடுத்து வருகிறார். குறிப்பாக சொல்ல வேண்டுமானால் 2024 ஆம் ஆண்டு நடந்த சம்பவத்தை சொல்லலாம்.
தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் வேல்முருகன் பேசிய போது, கூத்தாடிகளை தூக்கி வைத்து கொண்டாடுற இந்த நிலை உடைபட வேண்டும், உடைக்கப்பட வேண்டும். இப்போது கூட நான் பேசிவிட்டு வெளியே போனால் விஜய் ரசிகர்கள் 100 பேர் என்னை கல்லால் அடிக்கக் கூடும். அப்படி அடித்தால் கூட கேட்க ஆள் இல்லை.
அவர்களுக்கு யாருடைய பங்களிப்பு குறித்து தெரியாது. அது குறித்து கவலையும் இல்லை என பேசியிருந்தார். இதற்கு லயோலா மணி அறிக்கையில் பதிலடி கொடுத்தார். அதில் தளபதி தலைவர் அவர்களின் தம்பிகள், தங்கைகள், நலம் விரும்பிகள், ஆதரவாளர்கள், எல்லோரும் ரசிகர்கள் இல்லை. அனைவரும் தோழர்கள். நாங்கள் கல்லை கையில் எடுக்கும் வன்முறையாளர்கள் இல்லை. கொள்கைகளையும், கோட்பாடுகளையும் கையில் எடுக்கும் தோழர்கள், தலைவர்கள். அண்ணல் அம்பேத்கரை, தந்தை பெரியாரை, கர்ம வீரர் காமராஜரை, மேதகு தலைவரை படித்த முற்போக்காளர்கள்.
விமர்சனங்களை இன்முகத்துடன் கடந்து செல்லுங்கள் என்று தலைவரால் பக்குவப்படுத்தப்பட்ட பண்பாளர்கள் எங்களின் தோழர்கள். கூத்தாடி என்பது இழிவல்ல. கூத்து என்பது தமிழர்களின் பாரம்பரிய பண்பாடு. கூத்து என்பது கலை தொழில். தளபதி தலைவர் அவர்கள் நடிகர் என்பதை தாண்டி தமிழ் மண்ணின் நலன்களுக்காக போராடிய தலைவர். அவர் நடிகரல்ல தலைவர். கல் எங்களின் ஆயுதமல்ல, அறிவாயுதமே எங்கள் தோழர்களின் ஆயுதம்" என்று தெரிவித்திருந்தார்.












Click it and Unblock the Notifications