இந்தியா வர அமெரிக்கர்களுக்கு தடை நீங்கியது
டெல்லி:
போர் பயம் காரணமாக இந்தியாவுக்கு அமெரிக்கர்கள் யாரும் செல்ல வேண்டாம் என்று அந்நாடு விதித்திருந்ததடை நீக்கப்பட்டுள்ளது.
கடந்த மே 14ம் தேதி ஜம்மூ அருகே கலூச்சாக்கில் உள்ள இந்திய ராணுவ முகாமைத் தாக்கிய பாகிஸ்தான்பயங்கரவாதிகள் சுமார் 40 பேரைச் சுட்டுக் கொன்றனர். இதையடுத்து இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையேபோர் பதற்றம் ஏற்பட்டது.
அணு ஆயுதங்கள் வைத்துள்ள இரு நாடுகளுக்கும் இடையே எந்த நேரத்திலும் போர் வெடிக்கலாம் என்றசூழ்நிலை ஏற்பட்டது.
இதையடுத்து தன் நாட்டைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள், வர்த்தகர்கள் யாரும் இந்தியாவுக்குச் செல்ல வேண்டாம்என்று ஆஸ்திரேலியா தான் முதன் முதலாக அறிவுறுத்தியது.
இதைத் தொடர்ந்து ஜப்பான், நியூசிலாந்து, கனடா, அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து நாடுகளும் தங்கள்குடிமக்களை இந்தியாவுக்குப் போக வேண்டாம் என்று தடை விதித்தனர்.
மேலும் இந்தியாவில் தங்கியிருக்கும் தங்கள் நாட்டினரும் உடனடியாக வெளியேறுமாறும் அந்நாடுகள் கேட்டுக்கொண்டன. இதைத் தொடர்ந்து இங்கு தங்கியிருந்த ஏராளமான வெளிநாட்டினர் வெளியேற ஆரம்பித்தனர்.
இந்நிலையில் தற்போது இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே பதற்றம் தணிந்துள்ளது. இதையடுத்து தங்கள்நாட்டினர் இந்தியாவுக்குச் செல்லலாம் என்று அமெரிக்கா கூறியுள்ளது.
வர்த்தகர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் இனி இந்தியாவுக்கு வரலாம் என்று டெல்லியில் உள்ள அமெரிக்கதூதரகம் இன்று அறிவித்தது. அமெரிக்க வெளியுறவுத்துறை அறிவுரையின் படி தூதரகம் இதை அறிவித்துள்ளது.
இதே போல் இங்கிலாந்தும் இது போன்ற தடையை நீக்கியுள்ளது. தங்கள் நாட்டைச் சேர்ந்தவர்கள் இந்தியாவுக்குச்செல்லலாம் என்று அந்நாடு கூறியுள்ளது.