நாளை முதல்வராகிறார் முலாயம்: மாயாவதி கட்சியில் பிளவு
லக்னெள:
உத்தரப் பிரதேச முதல்வராக சமாஜ்வாடி கட்சியின் தலைவர் முலாயம் சிங் யாதவ் நாளை (வெள்ளிக்கிழமை)பதவியேற்கிறார்.
அவரை அரசமைக்க வருமாறு நேற்றிரவு ஆளுநர் விஷ்ணுகாந்த் சாஸ்த்ரி அழைப்பு விடுத்தார். இதையடுத்துஆளுநரை முலாயம் சிங் சந்தித்தார். ஆனால், தனது ஆதரவு எம்.எல்.ஏக்கள் பட்டியலை ஆளுநரிடம் தரமறுத்துவிட்டார்.
மெஜாரிட்டியை சட்டமன்றத்தில் தான் நிரூபிப்பேன் என்று முலாயம் திட்டவட்டமாகக் கூறிவிட்டார்.
முன்னதாக மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சி எம்.எல்.ஏக்கள் 13 பேர் ஆளுநரைச் சந்தித்து முலாயமுக்கு தங்களதுஆதரவைத் தெரிவித்தனர். இவர்களை முலாயமின் ஆட்கள் துப்பாக்கி முனையில் கடத்திச் சென்றாக மாயாவதிகூறியுள்ளார்.
ஆனால், அதை அந்த எம்.எல்.ஏக்களும் முலாயமும் மறுத்துள்ளனர். காங்கிரஸ், இடதுசாரிக் கட்சிகள், அஜீத்சிங்கின் ராஷ்ட்ரீய லோக் தள், முன்னாள் முதல்வரும் பா.ஜ.கவிலிருந்து வெளியேவருமான கல்யாண் சிங்ஆகியோரின் கட்சிகளும் முலாயமுக்கு ஆதரவு தந்துள்ளன.
403 எம்.எல்.ஏக்கள் கொண்ட சட்டமன்றத்தில் ஆட்சி அமைக்க 202 எம்.எல்.ஏக்களின் ஆதரவு தேவை. இப்போதுதனக்கு 210 எம்.எல்.ஏக்களின் ஆதரவு இருப்பதாக முலாயம் சிங் தெரிவித்துள்ளார்.
பா.ஜ.கவுடன் மோதல் முற்றியதால் மாயாவதி தனது முதல்வர் பதவியை 3 நாட்களுக்கு முன் ராஜினாமா செய்தார்.இதையடுத்து போதிய ஆதரவு இல்லாத பா.ஜ.க. விலகிக் கொள்ள 63 வயதான முலாயம் சிங் மூன்றாவதுமுறையாக முதல்வராகிறார்.
இப்போது தனது சொந்த ஊரான ராய் பரேலிய்ல் இருக்கும் முலாயம் நாளை பதவியேற்றுக் கொள்வார் எனஅவரது உதவியாளர் ஜக்ஜீவன் பிரசாத் தெரிவித்தார்.
சமாஜ்வாடி கட்சிக்கு 142 எம்.எல்.ஏக்கள்உள்ளனர், காங்கிரஸ் 16, ராஷ்ட்ரீய லோக் தள் 14, ராஷ்ட்ரீய கிராந்திபார்ட்டி (கல்யாண் சிங்கின் கட்சி) 4, மார்க்ஸசிஸ்ட், பிரிந்து வந்த 13 பகுஜன் சமாஜ் எம்.எல்.ஏக்கள், மற்றும் 19குட்டி கட்சிகள், சுயேச்சைகள் முலாயமை ஆதரிக்கின்றனர்.
1989ம் ஆண்டில் காங்கிரஸ் ஆதரவுடன் ஆட்சிக்கு வந்தார் முலாயம். ஆனால், அவருக்கு தந்த ஆதரவைகாங்கிரஸ் திரும்பப் பெற்றதால் 1991ம் ஆண்டில் ஆட்சி கவிழ்ந்தது.
பாபர் மசூதி இடிப்புக்குப் பின் பா.ஜ.க. முதல்வராக இருந்த கல்யாண் சிங்கின் ஆட்சி கலைக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து 1993ம் ஆண்டு நடந்த தேர்தலில் மாயாவதியுடன் கூட்டணி அமைத்து, பா.ஜ.கவை தோற்கடித்து,ஆட்சியைப் பிடித்தார் முலாயம். ஆனால், பின்னர் மாயாவதி கவிழ்த்துவிட்டார்.
இப்போது மீண்டும் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் ஆதரவுடன் ஆட்சிக்கு வருகிறார்.












Click it and Unblock the Notifications