சென்னையில் போலீஸ் துப்பாக்கிச்சூடு.. ரவுடி ரூபேஷ் காலை துளைத்த தோட்டா.. திடுக் தகவல்
சென்னை: சென்னையில் கொலை வழக்கு தொடர்பாக இன்று கைது செய்ய சென்ற போலீசாரை ரவுடி ரூபேஷ் தாக்கி தப்ப முயன்றார். இதையடுத்து போலீசார் ரவுடி ரூபேஷின் காலில் துப்பாக்கியால் சுட்டு அதிரடியாக கைது செய்துள்ளனர்.

சென்னை நொளம்பூர் பகுதியில் வசித்து வருபவர் முருகதாஸ். இவரது மனைவி பெயர் செல்வி. இந்த தம்பதிக்கு 2 மகன்கள் உள்ளனர். ஒருவரின் பெயர் சஞ்சய். இன்னொருவரின் பெயர் சரத்குமார். இவர்கள் 2 பேரும் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகின்றனர்.
இந்நிலையில் தான் நேற்று இரவு வழக்கம்போல் முருகதாஸ் தனது குடும்பத்தினருடன் வீட்டில் தூங்கி கொண்டிருந்தார். அப்போது திபுதிபுவென வீட்டிற்குள் நுழைந்த கும்பல் கத்தியால் முருகதாஸ், அவரது மகன்கள் சஞ்சய், சரத்குமார் ஆகியோரை வெட்டிவிட்டு சென்றது.
இதில் 3 பேரும் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு துடித்தனர். தனது கணவர் மற்றும் 2 மகன்கள் கத்தியால் வெட்டப்பட்டதை பார்த்து அதிர்ச்சியடைந்த செல்வி உடனடியாக அக்கம்பக்கத்தினருக்கு தகவல் தெரிவித்தார். அவர்கள் 3 பேரையும் மீட்டு கீழ்ப்பாக்கத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவர்களை டாக்டர்கள் பரிசோதித்தனர். அப்போது முருகதாஸ் மற்றும் சரத்குமார் ஆகியோருக்கு சிகிச்சை அளித்த டாக்டர்கள், சஞ்சய் இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
முருகதாஸ், சரத்குமார் ஆகியோர் ஆபத்தான நிலையில் ஐசியூவில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுபற்றி நொளம்பூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். முதற்கட்ட விசாரணையில் முன்பகை காரணமாக கொலை நடந்தது தெரியவந்தது.
அதாவது இறந்த சஞ்சய்க்கு 2 நாட்களுக்கு முன்பு மதுரவாயல் ரவுடி கார்த்திக்கின் சகோதரர் உதயாவிற்கும் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இதில் உதயாவை, சஞ்சய் தாக்கி உள்ளார். இதனால் சஞ்சய்யை பழிவாங்க ரவுடி கும்பல் திட்டமிட்டது. அதன்படி சஞ்சய் நேற்று தண்ணீர் கேன் எடுத்து சென்றபோது அவரிடம் தகராறில் ஈடுபட்டுள்ளனர். அது வாக்குவாதத்திலேயே முடிவடைந்தது. அதன்பிறகு இரவில் சஞ்சய்யின் வீட்டிற்குள் நுழைந்து 8 பேர் கும்பல் கத்தியால் வெட்டியது. சஞ்சய் மட்டுமின்றி தந்தை முருகதாஸ், சரத்குமார் ஆகியோரையும் கத்தியால் வெட்டிவிட்டு சென்றது.
இந்த வழக்கில் மொத்தம் 8 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். வழக்கில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் ரூபேஷ் 'சி' கேட்டகிரி ரவுடியாக உள்ளார். இவரை கைது செய்ய போலீசார் சென்றனர். அப்போது ரூபேஷ் போலீசாரை தாக்கிவிட்டு தப்ப முயன்றார். இதனால் போலீசார் பாதுகாப்பு கருதி அவரது காலில் துப்பாக்கியால் சுட்டனர். இதில் ரவுடி ரூபேஷின் காலில் குண்டு பாய்ந்தது. சம்பவ இடத்திலேயே சுருண்டு விழுந்தார். இதையடுத்து அவரை போலீசார் கைது செய்ததோடு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் இன்று சென்னையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications