மழைக்கு நடுவே.. சென்னை சமூகநீதி விடுதி ஆய்வில் முதல்வர் விஜய்யிடம் மாணவர்கள் அடுக்கிய புகார்கள்
சென்னை: சென்னையில் மழைக்கு நடுவே சைதாப்பேட்டையில் உள்ள சமூகநீதி விடுதியில் முதல்வர் விஜய் இன்று மாலையில் திடீரென்று ஆய்வு மேற்கொண்டார். இந்த சமயத்தில் விடுதியில் உள்ள மாணவர்கள் விஜய்யிடம் பல்வேறு புகார்களை கூறிய நிலையில் விரைவில் சரிசெய்து வழங்குவதாக விஜய் உறுதியளித்துள்ளார்.
சென்னை சைதாப்பேட்டையில் எம்சி ராஜா கல்லூரி மாணவர் விடுதி உள்ளது. தமிழகத்தின் பிற மாவட்டங்களில் இருந்து சென்னைக்கு வரும் ஆதிதிராவிடர், பழங்குடியின மாணவர்கள் இந்த விடுதியில் தங்கி பயிலலாம். முந்தைய திமுக ஆட்சியில் இந்த விடுதி புனரமைக்கப்பட்டு திறக்கப்பட்டது.
இந்நிலையில் தான் முதல்வர் விஜய் இன்று திடீரென்று சமூக நீதி விடுதியில் ஆய்வு மேற்கொண்டார். வேஷ்டி, சட்டை அணிந்து விஜய் இந்த ஆய்வில் ஈடுபட்டார்.

இந்த ஆய்வின்போது துறை சார்ந்த அமைச்சரான வன்னியரசு உடன் இருந்தார். விஜய் ஆய்வின்போது மழை பெய்தது. இதனால் முதல்வர் விஜய் குடைபிடித்தபடி ஆய்வு மேற்கொண்டார். விடுதியில் உள்ள மாணவர்களிடம் முதல்வர் விஜய் பேசி குறைகளை கேட்டார். இந்த ஆய்வின்போது மாணவர்கள் பல்வேறு புகார்களை முதல்வர் விஜய்யிடம் கூறினர். விடுதியில் சில நேரம் உணவு சுவையாக உள்ளது. சில நேரம் சரியாக டேஸ்ட்டில் உணவு இருப்பது இல்லை. விடுதியில் கழிவறை கதவுகளை மாற்றி கொடுக்க வேண்டும். கண்காணிப்பு கேமரா குறைவாக உள்ளது.
வாட்ச்மேன் மற்றும் விடுதி கண்காணிப்பாளர் மாணவர்களை தரக்குறைவாக சில நேரங்களில் பேசுகின்றனர். இதனால் மாணவர்கள் மனஉளைச்சலுக்கு ஆளாகுகின்றனர். சில மாணவர்கள் விடுதியை விட்டு செல்லும் முடிவை எடுக்கின்றனர். இந்த பிரச்சனையை சரிசெய்து வழங்க வேண்டும் என்று புகார்கள் அளித்தனர்.
அதனை கேட்ட விஜய் உடனடியாக நடவடிக்கை எடுத்து பிரச்சனைகளை தீர்ப்பதாக உறுதியளித்து சென்றார். முதல்வர் விஜய் விடுதியில் ஆய்வு மேற்கொள்வதை அறிந்தவுடன் அங்கு ஏராளமானவர்கள் திரண்டதோடு, விஜய்க்கு ஆதரவாக கோஷமிட்டனர்.













Click it and Unblock the Notifications