ஓய்வு பெறும் வயது குறைப்பு: அமைச்சரவை ஆலோசனை
சென்னை:
தமிழக அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயதை 58ல் இருந்து 56 ஆகக் குறைப்பது, வார வேலை நாட்களை 5ல் இருந்து 6 ஆக உயர்த்துவது ஆகியவை குறித்து இன்று அமைச்சரவையைக் கூட்டி முதல்வர் ஜெயலலிதா தீவிர ஆலோசனை நடத்தினார்.
இது தொடர்பான நிதியமைச்சர் பொன்னையன் தலைமையில் அமைக்கப்பட்ட கமிட்டியின் பரிந்துரைகள் விரிவாக விவாதிக்கப்பட்டன. பகல் 12.30க்குக் கூடிய இக் கூட்டத்தில் அமைச்சர்கள், தலைமைச் செயலாளர் லட்சுமி பிரானேஷ் உள்ளிட்ட மூத்த அதிகாரிகள் பங்கேற்றனர்.
தமிழகத்தில் 12 லட்சம் அரசு ஊழியர்கள் உள்ளனர். மற்ற மாநிலங்களின் மக்கள் தொகையில் ஒரு சதவீதத்தினர் அரசு ஊழியர்களாக உள்ளனர். ஆனால், தமிழகத்திலோ இது 2 சதவீதமாக உள்ளது. இதனால் அரசு ஊழியர்கள் எண்ணிக்கையை அதிரடியாகக் குறைக்க அரசு முடிவு செய்துள்ளது.
இதன் முதல் கட்டமாகவே ஓய்வு பெறும் வயதை 56 ஆகக் குறைப்பது.
இன்றைய கூட்டத்தில் என்ன முடிவு எடுக்கப்பட்டது என்று தெரியவில்லை.