ஓய்வு முகாம்: முதுமலைக்கு யானைகளை கொண்டு செல்ல டி.ஆர். பாலு தடை
சென்னை:
ஓய்வு கொடுப்பதாகக் கூறி தமிழக கோவில் யானைகளை அடித்து, உதைத்து லாரிகளில் ஏற்றி முதுமலைக்குக்கொண்டு செல்லும் தமிழக அரசின் செயல்களுக்கு மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம் தடைவிதித்துள்ளது. இத் துறையின் அமைச்சர் திமுகவைச் சேர்ந்த டி.ஆர். பாலு என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழகத்தில் உள்ள கோவில் யானைகளை முதுமலையில் முகாம் அமைத்து ஒரு மாத காலத்திற்கு ஓய்வு அளிக்கதமிழக அரசு திட்டமிட்டு, தமிழகம் முழுவதிலும் உள்ள கோவில் யானைகளை முதுமலைக்குக் கொண்டு சென்றது.
கோவில் யானைகளை லாரிகளில் ஏற்ற முயன்றபோது அவை முரண்டு பிடித்ததால், பல யானைகளை அடித்தும்,தார் குச்சிகளால் குத்தியும், வலுக்கட்டாயமாக ஏற்றி முதுமலைக்குக் கொண்டு செல்லப்பட்டன.
யானைகளை துன்புறுத்துவதற்கு பல்வேறு அமைப்புகளும் கண்டனம் தெரிவித்தன. இது தொடர்பாக மத்தியஅரசுக்கும் புகார்கள் அனுப்பப்பட்டன.
இந் நிலையில், யானைகளை முதுமலைக்குக் கொண்டு சென்று ஓய்வு கொடுக்கும் தமிழக அரசின் திட்டத்திற்குமத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சகம் தடை விதித்துள்ளது. யானைகளை வலுக்கட்டாயமாக லாரிகளில் ஏற்றிக்கொண்டு செல்லக் கூடாது என்று சுற்றுச்சூழல் அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
இது குறித்து அறிக்கை தாக்கல் செய்யுமாறும் தமிழக அரசுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
ஆனால், ஏற்கனவே யானைகள் முதுமலைக்குக் கொண்டு செல்லப்பட்டு முகாமும் தொடங்கிவிட்டது. இனியும்மேற்கொண்டு யானைகளை கொண்டு செல்வதை மத்திய அரசின் உத்தரவு தடுக்கும் என்று தெரிகிறது.
முதல்வர் ஜெயலலிதாவுக்காக, ஒரே இடத்தில் கோவில் யானைகளைக் கொண்டு வந்து, கஜ பூஜை நடத்தவே இந்தமுகாம் நடத்தப்பட்டு வருவதாக எதிர்க் கட்சிகள் குற்றம் சாட்டி வருவது குறிப்பிடத்தக்கது.