For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஜெ. சொத்துக் குவிப்பு வழக்கு பெங்களூருக்கு மாற்றம்- உச்ச நீதிமன்றம் அதிரடி

By Staff
Google Oneindia Tamil News

டெல்லி:

வருமானத்தை மீறி சொத்து சேர்த்தது தொடர்பாக முதல்வர் ஜெயலலிதா, உடன்பிறவா சகோதரி சசிகலா ஆகியோர் மீது தொடரப்பட்டுள்ள வழக்குகளை சென்னையில் இருந்து பெங்களூருக்கு மாற்றி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதற்காக 6 வாரத்துக்குள் பெங்களூரில் ஒரு சிறப்பு நீதிமன்றத்தை அமைத்து, தனி நீதிபதியை நியமிக்கவும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

அதிமுக அரசின் கீழ், சென்னையில் இந்த வழக்குகள் விசாரிக்கப்பட்ட முறை பெரும் சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளதாகவும் உச்ச நீதிமன்றம் கருத்துத் தெரிவித்துள்ளது.

கடந்த முறை ஆட்சியில் இருந்தபோது ஜெயலலிதா, சசிகலா, மாஜி வளர்ப்பு மகன் சுதாகரன், சசியின் உறவினர் இளவரசி ஆகியோரும், அதிமுக எம்.பியும் சசியின் அக்காள் மகனுமான தினகரன் ஆகியோரும் ரூ. 66 கோடி அளவுக்கு சொத்து குவித்தனர்.

இதற்கு அவர்களிடம் முறையான வருமானம் இல்லை.

இது தொடர்பாக ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணியம் சுவாமி தான் பிரச்சனையைக் கிளப்பினார்.

இதையடுத்து இவர்கள் மீது கடந்த திமுக ஆட்சியில் இரு சொத்துக் குவிப்பு வழக்குகள் தொடரப்பட்டன. வழக்கு விசாரணை சென்னை தனி நீதிமன்றத்தில் நடந்து வந்தது.

ஆனால், ஆட்சி மாறி மீண்டும் அதிமுக ஆட்சிக்கு வந்தபின் வழக்கு திசை மாறத் தொடங்கியது. இந்த சொத்து குவிப்பு தொடர்பாக ஜெயலலிதா, சசிகலாவுக்கு எதிராக சாட்சி சொன்ன 76 பேரில் 64 பேர் தங்களது நிலையை மாற்றிக் கொண்டு பல்டி அடித்தனர்.

ஜெயலலிதாவுக்கு எதிரான சாட்சிகள் பல்டி அடித்தபோது, அவர்களை அரசுத் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் கேள்வியே கேட்கவில்லை. ஜெயலலிதா ஆட்சியில் இருப்பதால் தான் அரசுத் தரப்பு வழக்கறிஞர்கள் இவ்வாறு நடந்து கொண்டதாக புகார் எழுந்தது.

மேலும் வழக்கு விசாரணையும் படு வேகத்தில் நடத்தப்பட்டது. இந்த வழக்கில் ஜெயலலிதா நேரில் நீதிமன்றத்தில் ஆஜாகவே இல்லை. அரசு வழக்கறிஞரின் கேள்விகள் அவரது போயஸ் கார்டன் இல்லத்துக்கு அனுப்பப்பட்டன. அங்கிருந்து அவர் நீதிமன்றத்துக்கு பதில் அனுப்பிக் கொண்டிருந்தார். இதனால் வழக்கின் போக்கே திசைமாறியது.

இதனால் இந்த வழக்கில் இருந்து ஜெயலலிதாவையும், சசிகலாவையும் தப்ப வைக்க முயற்சி நடப்பதாகவும், வழக்கை வேறு மாநில நீதிமன்றத்துக்கு மாற்ற வேண்டும் என்றும் கோரி திமுக பொதுச் செயலாளர் அன்பழகன் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி வரியவா, நீதிபதி செமாஆகியோர் அடங்கிய டிவிஷன் பெஞ்ச் விசாரணையை கடந்த மாதமே முடித்துவிடடது. தீர்ப்பை மட்டும் காலவரையின்றி ஒத்தி வைத்திருந்தது.

இந் நிலையில் இன்று நீதிபதிகள் அதிரடித் தீர்ப்பு வழங்கினர். வழக்குகளை பெங்களூர் நீதிமன்றத்துக்கு மாற்றி உத்தரவிட்டனர்.

கர்நாடக உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதிக்கு அவர்கள் பிறப்பித்த உத்தரவில், ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசு, தினகரன் ஆகியோர் மீதான இந்த வழக்குகளை விசாரிக்க பெங்களூரில் தனி நீதிமன்றத்தை உருவாக்குமாறு உத்தரவிட்டனர். தனி நீதிபதியை நியமிக்கவும் ஆணையிட்டனர்.

மேலும் ஜெயலலிதாவுக்கு எதிராக (தமிழக) அரசுத் தரப்பில் இந்த வழக்கை வாதாட மூத்த வழக்கறிஞரை வழக்கறிஞரை நியமிக்கவும் உத்தரவிட்டனர்.

நீதிபதிகள் கூறுகையில்,

சென்னை தனி நீதிமன்றத்தில் இந்த வழக்குகள் விசாரிக்கப்பட்ட முறையைப் பார்த்தால், அங்கு நீதி கிடைத்திருக்குமா என்பதே பலத்த சந்தேகத்திற்கிடமாக உள்ளது. விசாரணை நேர்மையாகவும், ஒளிவு மறைவில்லாமலும் நடந்ததாகவும் தெரியவில்லை.

வழக்கு விசாரணை நடத்தப்பட்ட வேகமும், முறையும் சாதாரண மக்களுக்கு நீதித்துறை மீதான நம்பிக்கையை சிதைக்கும் வகையில் இருந்துள்ளது.

நீதித்துறையின் மீது சாதாரண மக்களுக்கு நம்பிக்கை சிதைந்துவிடாமல் தடுக்கவே இந்த வழக்கு பெங்களூருக்கு மாற்றப்படுகிறது. மேலும் இதன் மூலம் தான் சரியான தீர்ப்பு கிடைக்கும் என்றும் நம்புகிறோம்.

வழக்கை விசாரிக்க தனி நீதிமன்றத்தை கர்நாடக உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி அமைக்க வேண்டும். இதற்கு ஒரு தனி நீதிபதியையும், தமிழக அரசின் தரப்பில் வாதாட (ஜெயலலிதாவுக்கு எதிராக வாதாட) ஒரு மூத்த வழக்கறிஞரையும் நியமிக்க வேண்டும்.

இவையெல்லாம் 6 வார காலத்துக்குள் நடந்து முடிய வேண்டும். இதையடுத்து விசாரணை எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு விரைவில் தொடங்க வேண்டும். 1997ம் ஆண்டிலிருந்தே இந்த வழக்கு நிலுவையில் இருப்பதால் இனியும் கால தாமதம் செய்யக் கூடாது.

(தமிழக) அரசுத் தரப்பில் ஆஜராக நியமிக்கப்படும் மூத்த வழக்கறிஞருக்கு தமிழக காவல்துறையின் கிரைம் பிராஞ்ச் போலீசார் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். இவருக்கான ஊதியத்தை கர்நாடக அரசு வழங்க வேண்டும். பின்னர் இந்தச் செலவை தமிழக அரசிடம் இருந்து கர்நாடகம் வசூலித்துக் கொள்ளலாம்.

எந்த சாட்சியை வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் கூப்பிட்டு விசாரிக்க அந்த வழக்கறிஞருக்கு அதிகாரம் உண்டு.

வழக்கறிஞர் கூப்பிடும் சாட்சியை பெங்களூருக்கு அழைத்து வர வேண்டியது தமிழக அரசின் பொறுப்பாகும். அந்த சாட்சிகளுக்கு கர்நாடக அரசு போதிய பாதுகாப்பு வழங்க வேண்டும்.

இந்த வழக்குத் தொடர்பான அனைத்து ஆவணங்களையும் உடனடியாக பெங்களூரில் அமையவுள்ள தனி நீதிமன்றத்திடம் தமிழக அரசு ஒப்படைக்க வேண்டும்.

தனி நீதிமன்றத்தில் இரு வழக்குகளின் விசாரணையை தினந்தோறும் நடத்தி, விரைவில் நீதி வழங்க வேண்டும்.

இவ்வாறு நீதிபதிகள் கூறினர்.

உச்ச நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு ஜெயலலிதாவுக்கு ஏற்பட்ட மிகப் பெரிய பின்னடைவாகக் கருதப்படுகிறது.இந்த அதிர்ச்சித் தீர்ப்பையடுத்து மூத்த வழக்கறிஞர்களுடன் ஜெயலலிதா தீவிர ஆலோசனையில்இறங்கியிருப்பதாகக் கூறப்படுகிறது. இதனால் இன்று அவர் கோட்டைக்கும் வரவில்லை. தீர்ப்பை எதிர்த்து அவர்உச்ச நீதிமன்றத்திலேயே மேல் முறையீடு செய்வார் என்று தெரிகிறது.

ஜெயலலிதாவுக்கு எதிரான டான்சி வழக்கின் தீர்ப்பு உச்ச நீதிமன்றத்தில் கடந்த ஓராண்டுக்கும் மேலாக நிலுவையில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X