மன்மோகன், சோனியாவுக்கு கருணாநிதி நன்றி !
சென்னை:
கர்நாடகத்திலிருந்து காவிரி நீரைத் திறந்து விட உதவி செய்த பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ஆகியோருக்கு திமுக தலைவர் கருணாநிதி நன்றி தெரிவித்து கடிதம் எழுதியுள்ளார்.
கபினி அணையிலிருந்து தண்ணீர் தமிழகத்துக்கு வந்து கொண்டுள்ள நிலையில் கருணாநிதி எழுதியுள்ள கடிதத்தில் கூறியுள்ளதாவது:
எனது கோரிக்கையை ஏற்று கர்நாடக முதல்வருடன் பேசி கர்நாடகத்தின் கபினி அணையிலிருந்து காவிரியில் தமிழகத்துக்குத் தண்ணீர் திறந்து விட ஏற்பாடு செய்ததற்கு நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
பாதிக்கப்பட்ட தமிழக காவிரி டெல்டா பாசன விவசாயிகளுக்கு, தங்களது தக்க சமயத்திலான உதவியினால் பெரும் பலன் ஏற்பட்டுள்ளது என்று கூறியுள்ளார் கருணாநிதி.
ராமதாஸ் வெற்றி அறிக்கை:
காவிரி ஆணையத்தின் தலைவரான பிரதமர் மன்மோகன் சிங்கின் உத்தரவையடுத்து தண்ணீர் திறந்துவிட கர்நாடகம் முன் வந்துள்ளது. கடந்த மூன்றாண்டுகளாக நிலவிய கடுமையான நிலை மாறி, சுமூக நிலை உருவாகியுள்ளது.
காவிரியில் தண்ணீர் பெறும் முயற்சியில் மாநில அரசுக்குள்ள பொறுப்பை முதல்வர் ஜெயலலிதா தட்டிக் கழித்த நிலையில், ஜ.மு.கூட்டணியின் தலைவரான கருணாநிதி மேற்கொண்ட முயற்சிகளுக்கு நல்ல பலன் கிடைத்திருக்கிறது.
காரசாரக் கடிதங்கள், வழக்குகள், பரபரப்பான புகார்கள் என்று பலன் தராத ஜெயலலிதாவின் கடந்த கால செயல்களுக்கு மாறாக சமூகமான சூழ்நிலையில் விவாதித்தன் பலனாகத் தான் தண்ணீர் கிடைத்துள்ளது.
மூன்று ஆண்டுகளாக ஜெயலலிதா அரசு சாதிக்காததை 3 வாரத்தில் எங்கள் கூட்டணி சாதித்துக் காட்டியுள்ளது.
கபினி அணை நிரம்பி வழிவதால் மட்டும் நீர் திறந்துவிடப்பட்டு வருகிறது என்பதல்ல. பிரதமரின் அறிவுறுத்தலால் இதர அணைகளில் இருந்தும் தண்ணீர் திறந்துவிடும் என்ற நம்பிக்கை அதிகரித்திருக்கிறது என்று கூறியுள்ளார் ராமதாஸ்.
வீரமணி பாராட்டு:
இது குறித்து திக தலைவர் கி.வீரமணி வெளியிட்டுள்ள அறிக்கையில்,
திமுக தலைவர் கருணாநிதி தலைமையிலான கூட்டணி, முதல்வர் ஜெயலலிதாவின் அதிமுக ஆகியவை காவிரிப் பிரச்சனையில் இணைந்து எடுத்த முயற்சிகள் நல்ல பலனைத் தந்துள்ளன. இதற்காக அனைவரையும் பாராட்டுகிறேன்.
கர்நாடக அரசை வலியுறுத்தி நீர் தரச் சொன்ன பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியாவுக்கும் பாராட்டுகள் என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications