பாமக - விஜய்காந்த் மோதல் முற்றுகிறது
சென்னை:
சென்னை அம்பத்தூர் பகுதியில் உள்ள நடிகர் விஜயகாந்த்தின் ரசிகர் மன்றங்கள் மீது பாமகவினர் திடீர் தாக்குதல் நடத்தினர். விஜயகாந்த்தின் கட்-அவுட்களும் அடித்து நொறுக்கப்பட்டன.
இதற்கிடையே தன்னைப் பற்றிய பெருமைகளைச் சொல்லும் விசிடிக்களை தனது ரசிகர் மன்றங்களுக்கு ஆயிரக்கணக்கில் அனுப்பியுள்ள விஜய்காந்த், அவற்றை மக்கள் கூடும் இடங்களில் போட்டுக் காட்டச் சொல்லி உத்தரவிட்டிருக்கிறார். அதில் பா.ம.கவை விஜய்காந்த் போட்டுத் தாக்கும் வசனங்களும் இடம் பெற்றுள்ளன.
பாமக நிறுவனர் ராமதாஸ், அவரது மகன் மத்திய அமைச்சர் அன்புமணி ஆகியோரை நடிகர் விஜயகாந்த் நேரடியாகவும், மறைகமாகவும் தாக்கிப் பேசி வருகிறார்.
சமீபத்தில் வன்னியர் பகுதியான கள்ளக்குறிச்சிக்குச் சென்ற விஜய்காந்த் பொதுக் கூட்டத்தில் பேசுகையில், சாதிக் கட்சி என்று சொல்லி பா.ம.கவை மிகக் கடுமையாகத் தாக்கினார். இதற்குப் பதிலடியாக பா.ம.கவினரும் விஜய்காந்தின் ஜாதியைச் சொல்லி விமர்சித்து போஸ்டர்கள் ஒட்டி வருகின்றனர்.
ஜூனியர் விகடனுக்கு பேட்டியளித்த விஜய்காந்த், ராமதாஸ் என்ற பூனைக்கு மணி கட்டக் கிளம்பிவிட்டதாகக் கூறியிருந்தார். இதையடுத்து விஜய்காந்தை அரைவேக்காடு என ராமதாஸ் விமர்சிக்க இரு தரப்பிலும் அறிக்கை, பேட்டி மோதல்கள் தொடர்ந்து கொண்டுள்ளன.
இந் நிலையில் விஜயகாந்த்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து சென்னை அம்பத்தூர் பகுதியில் பாமகவினர் திடீர் ஊர்வலம் நடத்தினர்.
இந்த ஊர்வலத்தின்போது புதூர், கள்ளிக்குப்பம், அம்பத்தூர் பழைய பஸ் நிலையம் ஆகிய பகுதிகளில் இருந்த விஜயகாந்த்தின் ரசிகர் மன்றங்களை பாமகவினர் தாக்கினர்.
அங்கு வைக்கப்பட்டிருந்த விஜயகாந்த் கட் அவுட்களும் அடித்து நொறுக்கப்பட்டன. போர்டுகளை உடைத்து எறிந்தனர்.
இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. பாமகவினரின் செயலால் ஆத்திரமடைந்த விஜயகாந்த் ரசிகர்கள் அங்கு குவியத் தொடங்கினர்.
உடனடியாக போலீஸார் அங்கு வரவழைக்கப்பட்டு அனைவரையும் கலைந்து போகச் செய்தனர்.
தொடர்ந்து பதற்றம் நிலவுவதால் அம்பத்தூர் மற்றும் சுற்று வட்டாரங்களில் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.
விஜய்காந்த்தாக மாறும் எம்.ஜி.ஆர்:
இந் நிலையில் விஜய்காந்தும் தனது ரசிகர் மன்றத்தினரை அழைத்து தீவிரமான வேலைகளில் இறங்குமாறு உத்தரவிட்டுள்ளார். முடிந்தவரை புதிய மன்றங்களை உருவாக்கவும், மன்றக் கொடிகளை ஏற்றவும் கூறியுள்ளாராம், குறிப்பாக வன்னியர் பகுதிகளில்..
அதே போல தனது ரசிகர் மன்றங்களுக்கு விசிடிக்களையும் அனுப்பி வருகிறார்.
அந்த விசிடிக்களில் முதலில் எம்.ஜி.ஆர் வருகிறார். அவரது குளோஸ்-அப் முகம் அப்படியே விஜய்காந்தாக மாறுகிறது. விஜய்காந்த் நடத்தி வைக்கும் இலவச திருமணங்கள், அவர் நடத்தும் இலவச மருத்துவமனை குறித்த விளக்கம், ஏழைகளுக்கு உதவும் காட்சிகள் ஆகியவை அடுத்தடுத்து வருகின்றன.
அப்படியே, ஏழைப் பெண்களிடம் எடுக்கப்பட்ட பேட்டி வருகிறது. ஒரு பெண், மவராசன் விஜய்காந்த். அள்ளி அள்ளித் தர்ராறு.. அவரு நல்லா இருக்கணும் என்று உள்ளம் உருகுகிறார்.
இந்த விசிடியின் முக்கிய அம்சம், விஜய்காந்தின் ஆவேசப் பேச்சுக்கள் தான். அதில் அரசியல் கட்சிகளை, குறிப்பாக பா.ம.கவைத் தாக்கும் ஏகப்பட்ட வசனங்களும் இடம் பெற்றுள்ளனவாம்.
பேக்கிரவுண்டில் எம்.ஜி.ஆரின் பாடல்களோடு விஜய்காந்தின் படப் பாடல்களும் ஒலிக்கின்றன. விஜய்காந்தின் மன்றங்கள் தவிர, மக்கள் கூடும் சந்தை போன்ற இடங்களில் டிவிக்களில் இந்த விசிடியைப் போட்டுக் காட்டச் சொல்லி உத்தரவு வந்திருக்கிறதாம்.
கஜேந்திராவுக்கு அடி தர திட்டம்:
விஜய்காந்த் ஏதோ திட்டத்துடன் ஒரு பக்கம் காய் நகர்த்த, பா.ம.கவும் லேசில் விடுவது மாதிரி தெரியவில்லை.
ரஜினியின் பாபாவுக்குக் காட்டிய எதிர்ப்பைப் போல பல மடங்கு எதிர்ப்பை விஜய்காந்தின் அடுத்த படமான கஜேந்திராவுக்குக் காட்ட முடிவு செய்துள்ளார்களாம்.
வன்னியர் பெல்டான வட மாவட்டங்களில் இந்தப் படத்தை ஒரு இடத்திலும் ஓட விடக் கூடாது என்று பா.ம.க. தொண்டர்களுக்கு உத்தரவு வந்துள்ளதாக சொல்கிறார்கள்.
விஜயகாந்த் மீது பாமக கடும் ஜாதி தாக்கு
தாக்குறார்.. விஜய்காந்த் தாக்குறார்..












Click it and Unblock the Notifications