படுக்கையில் கிடக்கும் பெண்ணிடம் 50 பவுன் கொள்ளை
சென்னை:
சாலை விபத்தில் படுகாயமடைந்து படுத்த படுக்கையாய் இருக்கும் பெண்ணிடம், கத்தி முனையில் சிலர் 50 பவுன் நகை மற்றும் ரூ. 10,000 பணத்தைக் கொள்ளையடித்துச் சென்றனர்.
சென்னை கீழ்ப்பாக்கத்தைச் சேர்ந்தவர் சத்யலட்சுமி. இவர் சமீபத்தில் சாலை விபத்தில் சிக்கி முதுகெலும்பில் அடிபட்டு படுத்த படுக்கையாய் இருக்கிறார். இவருக்கு உதவியாக ஜரீனா என்ற பெண்மணி உடன் உள்ளார்.
நேற்று பிற்பகல் 2.45 மணிக்கு 3 பேர் இவரது வீட்டுக்கு வந்துள்ளனர். கூரியர் நிறுவனத்திலிருந்து வருவதாக அவர்கள் கூறவே, ஜரீனா கதவைத் திறந்துள்ளார். கதவை திறந்தவுடன், ஜரீனாவைத் தாக்கிய 3 பேரும் வீட்டுக்குள் அதிரடியாய் நுழைந்தனர்.
சத்யலட்சுமி இருந்த அறைக்குள் நுழைந்த அவர்கள் கத்தியைக் காட்டி மிரட்டி வீட்டில் உள்ள 200 பவுன் நகையையும், ரூ. 20 லட்சம் பணத்தையும் கொடுத்து விடுமாறு மிரட்டியுள்ளனர்.
அதிர்ந்து போன சத்யலட்சுமி, தன்னிடம் இருந்த சாவியை அவர்களிடம் கொடுத்து, பீரோவில் உள்ள நகைகளை எடுத்துக் கொள்ளுங்கள் என்னை விட்டு விடுங்கள் என்று கூறியுள்ளார்.
பின்னர் 3 பேரும் பீரோவில் வைக்கப்பட்டிருந்த நகைப் பெட்டியை எடுத்து அதில் இருந்த எல்லா நகைகளையும் பணத்தையும் எடுத்துக் கொண்டு தப்பிவிட்டனர். பீரோவில் மொத்தம் 50 பவுன் நகையும் ரூ. 10,000மும் இருந்துள்ளது.
தகவல் அறிந்ததும் துணை போலீஸ் கமிஷனர் கார்த்திகேயன் தலைமையில் போலீஸார் விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். படுத்த படுக்கையாய் இருக்கும் பெண்ணிடம் துணிகர கொள்ளை நடந்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சமீபத்தில்தான் திருவல்லிக்கேணி பகுதியில் வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியைக் கொன்று நகை கொள்ளையடிக்கப்பட்டது. இப்போது இந்தக் கொள்ளை நடந்திருப்பது சென்னை மக்களை பீதிக்குள்ளாக்கியுள்ளது.












Click it and Unblock the Notifications