ராஜ் டிவிக்கு ஆபத்து!
சென்னை:
ராஜ் டிவிக்கு அளிக்கப்பட்ட லைசென்ஸை மத்திய அரசு ரத்து செய்தது சரியான செயல் தான் என்று சென்னை உயர் நீதிமன்றம்தீர்ப்பளித்துள்ளது.
தீபாவளி நேரம் என்பதால் இன்னும் பத்து நாட்களுக்கு மட்டும் ராஜ் டிவியின் ஒளிபரப்பை தொடரலாம் என்றும் உயர்நீதிமன்றம்அனுமதியளித்துள்ளது.
ராஜ் டிவி குழுமத்தின் கீழ் ஒளிபரப்பாகும் ராஜ் டிவி, ராஜ் டிஜிட்டல் பிளஸ் ஆகிய இரு சேனல்களின் உரிமங்களும் கடந்த 2003ம்ஆண்டு செப்டம்பர் 30ம் தேதியுடன் முடிவடைந்து விட்டன.
இருப்பினும் சில பா.ஜ.க. தலைவர்களின் ஆதரவுடன், உரிமத்தைப் புதுப்பிக்காமல் தொடர்ந்து ஒளிபரப்பை மேற்கொண்டுவந்தது ராஜ் டிவி நிறுவனம்.
மேலும், புதிதாக ராஜ் விஸ்ஸா என்ற தெலுங்கு சேனலையும், ராஜ் மியூசிக்ஸ் என்ற புதிய சேனலையும் லைசென்ஸே பெறாமல்ஒளிபரப்பத் தொடங்கியது. இதில் தெலுங்கு சேனலை தெலுங்கு தேசத் தலைவரும் முந்தைய மத்திய ஆட்சியில் கொடி கட்டிப்பறந்தவருமான சந்திரபாபு நாயுடு தான் தொடங்கி வைத்தார்.
இந் நிலையில், லைசென்ஸ் விதிகள் மீறப்பட்டதைக் காரணம் காட்டி ராஜ் டிவி நிறுவனத்துக்குத் தரப்பட்ட உரிமத்தை ரத்துசெய்வதாக மத்திய தகவல் ஒளிபரப்பு அமைச்சகம் அறிவித்தது.
இதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது ராஜ் டிவி நிறுவனம். வழக்கை விசாரித்த நீதிமன்றம், மத்தியஅரசின் உத்தரவு செல்லும் என்று உத்தரவிட்டது.
இதை எதிர்த்து டிவிஷன் பெஞ்ச் முன் மேல் முறையீடு செய்தது ராஜ் டிவி நிறுவனம். இந்த மனுவை தலைமை நீதிபதி சுபாஷன்ரெட்டி, நீதிபதி கோவிந்தராஜன் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் விசாரித்தது.
விசாரணையை முடித்து தீர்ப்பளித்த நீதிபதிகள், ராஜ் டிவியின் உரிமத்தை ரத்து செய்து மத்திய அரசு உத்தரவிட்டது செல்லும்என்று தனி நீதிபதி அளித்த தீர்ப்பு சரியானதே என்று தீர்பளித்தனர்.
மேலும், புது உரிமம் கோரி ராஜ் டிவி நிறுவனம் மத்திய அரசிடம் மனு செய்யலாம். ஆனால் அதுவரை ராஜ் டிவி சேனல்களைஒளிபரப்பக் கூடாது.
இருப்பினும், தீபாவளியையொட்டி சிறப்பு நிகழ்ச்சிகள், விளம்பரதாரர்கள் நிகழ்ச்சிகளை ராஜ் டிவியும், ராஜ் டிஜிட்டல் பிளஸ்சேனலும் ஏற்கனவே ஒப்புக் கொண்டு விட்டன என்று மனுதாரர் தரப்பில் கூறப்படுவதால், இன்னும் 10 நாட்களுக்கு மட்டும் இருசேனல்களையும் தொடர்ந்து இயக்கலாம் என்று உத்தரவிட்டனர்.
உரிமத்தைப் புதுப்பிக்காமல் ராஜ் டிவி குழுமம் தனது சேனல்களை சட்டத்தை மீறி இயக்கி வந்ததற்கு நீதிபதிகள் கடும் கண்டனம்தெரிவித்தனர்.
புதிய லைசென்ஸ் கோரி மத்திய அரசிடம் ராஜ் உடனடியாக விண்ணப்பிக்கும் என்று தெரிகிறது. இதன் பின்னரே ராஜ் டிவிதொடர்ந்து செயல்பட அனுமதிக்கப்படுமா என்பது குறித்துத் தெரியவரும்.