குருமூர்த்தியிடம் பிரேம்குமார் தீவிர விசாரணை!
காஞ்சிபுரம்:
இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழின் ஆடிட்டரான எஸ்.குருமூர்த்தியிடம் காஞ்சிபுரம் போலீஸார் இன்று தீவிர விசாரணை நடத்தினர்.
பிரபல ஆடிட்டரான எஸ்.குருமூர்த்தி, சங்கர மடத்தின் மிகத் தீவிரமான பக்தர். ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் தீவிர உறுப்பினரான இவர் சுதேசிஜாக்ரன் மன்ஞ் என்ற அமைப்பையும் நடத்தி வருகிறார்.
இவர் சமீபத்தில் இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழில் ஜெயேந்திரர் கைது குறித்து அரசை மிகக் கடுமையாக விமர்சித்து கட்டுரைகள் எழுதிவந்தார். இந்தக் கட்டுரைகளில் இவர் தெரிவித்திருந்த கருத்துக்கள் குறித்து விசாரணைக்கு வருமாறு அவருக்கு காஞ்சிபுரம் கூடுதல் எஸ்.பி.சக்திவேல் சம்மன் அனுப்பினார். அதை ஏற்று இன்று குருமூர்த்தி காஞ்சிபுரம் வந்தார்.
அவரிடம் எஸ்.பி. பிரேம்குமார் தலைமையிலான டீம் மணிக்கணக்கில் விசாரணை நடத்தியது. காலை 11 மணிக்கு எஸ்.பி. அறைக்குள்போன குருமூர்த்தியிடம் சுமார் 2 மணி நேரத்துக்கும் மேலாக விசாரணை நடந்தது.
இண்டியன் எக்ஸ்பிரஸ் நாளிதழில் அவர் எழுதிய 4 கட்டுரைகளையும் வரிக்கு வரி படித்துக் காட்டிய போலீசார், அதற்கு இந்தத் தகவல்உங்களுக்கு எங்கிருந்து கிடைத்தது, இதை யார் சொன்னது என்று குடைச்சல் விசாரணை நடத்தினர்.
நெடுநேர விசாரணைக்குப் பின் வெளியே வந்த குருமூர்த்தி நிருபர்களிடம் பேசுகையில்,
நான் எழுதிய கட்டுரைகளால் போலீசார் டிஸ்டர்ப் ஆகி இருப்பதாகத் தெரிகிறது. எனக்கு சம்மன் அனுப்பப்பட்டது பத்திரிக்கைகளுக்குத்தரப்பட்டுள்ள எச்சரிக்கை தான். போலீசுக்கு எதிராக எதுவும் எழுதக் கூடாது என்பது தான் இந்த விசாரணை மூலம் நிருபர்களுக்குபோலீசார் விடுக்கும் எச்சரிக்கை.
நான் எழுதிய கட்டுரைகளை வரிக்கு வரி படித்து விளக்கம் கேட்டார்கள். இதை யார் சொன்னது, அதை யார் சொன்னது என்றுநோண்டினார்கள் என்றார்.
ஜன கல்யாண் நிர்வாகியிடமும் விசாரணை:
இதேபோல, ஜெயேந்திரர் தொடங்கிய ஜன கல்யாண் அமைப்பின் முன்னாள் நிர்வாகியான சென்னை ராமச்சந்திரன், அவரது மனைவி,தற்போதைய ஒருங்கிணைப்பாளரான காஞ்சிபுரம் கிராம அதிகாரி பசுபதி ஆகியோரிடமும் இன்னொரு போலீஸ் படை தனியாகவிசாரணை நடத்தியது.